சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் செய்ய தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு
டெல்லி: இணையதளங்களில் விளம்பரம் செய்ய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறை குறிப்பில்,
" விளம்பரங்களை வெளியிடும் முன்பு அதற்கு முன் அனுமதி பெற வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் விளம்பரங்களை வெளியிடும் இணையதளங்கள், அதுகுறித்த கணக்கை முறையாக பராமரிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் கேட்கும்போது, அதை அளிக்க வேண்டும். விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன்பாக, அதில் உள்ள வாசகங்கள் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானதாகவோ, சட்டத்துக்கு புறம்பானதாகவோ அல்லது கெட்ட நோக்கத்துடனோ இல்லை என்பதை இணையதள நிறுவனங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். "
இவ்வாறு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணைய இயக்குநர் திரேந்தர் ஓஜா மேலும் கூறியதாவது, :
" முக்கிய சமூக இணையதளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களை கண்காணிப்பது என்பது மிக சிரமமான பணி. ஆனால், எந்த அளவுக்கு அவற்றை கண்காணிக்க முடியுமோ அந்த அளவுக்கு விரிவான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. இதுகுறித்து இணையதள நிறுவனங்களுக்கு முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல் பணம் கொடுத்து செய்திகளை வெளியிடுவதை கண்காணிப்பதும் மிக சிரமமான காரியம். இந்த விஷயத்தில் ஊடகங்கள் சுய பொறுப்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ளுதல் வேண்டும் " இவ்வாறு அவர் தெரிவித்தார். .