மும்பை: டெலிபோன் ஆபரேட்டர் பலாத்கார வழக்கு: 5-வது குற்றவாளி கைது
மும்பை: மும்பையில் பெண் டெலிபோன் ஆபரேட்டர் கற்பழிப்பில் தலைமறைவாக இருந்த 5-வது குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அவரை 19-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மும்பையில் கடந்த மாதம் 22-ந் தேதி மகாலட்சுமி பகுதியில் உள்ள பாழடைந்த சக்தி மில் வளாகத்தில் பத்திரிகை பெண் புகைப்பட நிபுணர் 5 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விஜய் ஜாதவ், முகமது காசிம், சிராஜ் ரெஹ்மான்கான், காசிம் பெங்கலி மற்றும் ஒரு இளம் குற்றவாளி என 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதே மில் வளாகத்தில் தானும் 5 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டதாக பெண் டெலிபோன் ஆபரேட்டர் ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இவரை கற்பழித்த 5 பேர் கும்பலில் பெண் புகைப்பட நிபுணர் கற்பழிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சலிம் அன்சாரி, விஜய் ஜாதவ், முகமது காசிம் ஆகிய 3 பேர் இருந்தது தெரியவந்தது. இதனால் டெலிபோன் ஆபரேட்டர் கற்பழிப்பு சம்பவத்திலும் இவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இளம் குற்றவாளி ஒருவனையும் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் தலைமறைவான 5-வது குற்றவாளி ஆஸ்பேக் சேக் (19) என்பவனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். அவன் கிர்வாக் சவ்பாட்டி பகுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவனை பொறிவைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் அவன் நேற்று நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டான்.
அவனை வருகிற 19-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவன் சிறையில் அடைக்கப்பட்டான். அவனிடம் ஜெயிலில் அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.