டெல்லியை வாட்டி வதைக்கும் குளிர், பனிமூட்டம்: 48 ரயில்கள் தாமதம்
டெல்லி: தலைநகர் டெல்லியில் கடுங்குளிர் மற்றும் பனிப்பொழிவு இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பனிமூட்டத்தால் இன்று டெல்லியில் 48 ரயில்கள் தாமதாக கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டது.
வட இந்தியாவில் கடுங்குளிராக உள்ளது. பல்வேறு பகுதிகளில் இது வரை இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு உள்ளதால் 200க்கும் மேற்பட்ட சாலைகள் பனியால் மூடப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
இந்த ஆண்டு வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமாக குளிராக உள்ளது. குறைந்தபட்ச வெட்பநிலையே 6.4 டிகிரி செல்சியஸாக உள்ளது.
டெல்லியில் காலையிலும், மாலையிலும் கடும் பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டமாக இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பனிமூட்டத்தால் 600 மீட்டர் தொலைவு வரை உள்ளவை தான் தெளிவாகத் தெரிகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், தெருவில் நடந்து செல்பவர்களும் அவதிப்படுகிறார்கள்.
டெல்லியில் பனிமூட்டத்தால் இன்று தாஜ் எக்ஸ்பிரஸ், மஹாபோதி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 48 ரயில்கள் தாமதாக செல்லும் என்று வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.
டெல்லியில் நேற்று அதிகபட்ச வெட்பம் 17.5 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெட்பநிலை 7.2 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது.