வெங்காய விலை உயர்வை தடுக்க நடவடிக்கை: மத்திய அரசு அதிரடி
டெல்லி: இந்தியாவில் உள்ளூர் சந்தைகளில் வெங்காய விலை உயர்வைத் தடுக்க குறைந்த பட்ச ஏற்றுமதி விலையை மத்திய அரசு 500 டாலராக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் 15மில்லியன் டன் வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது. மிக முக்கிய நுகர்வு பொருளான வெங்காயம் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டால் உள்ளூர் சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்வு வழி வகுக்கும்.
இதனைக் கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்தின் குறைந்தபட்ச விலையை உயர்த்தி இன்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏற்றுமதி விலை அதிகரிப்பு
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்தின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ஒரு டன்னுக்கு 500 டாலராக அதாவது 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதி குறைந்து, உள்ளூர் சந்தைகளில் வெங்காயத்தின் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு
கடந்த ஜூன் 17ம் தேதி வெங்காயத்திற்காக குறைந்தபட்ச ஏற்றுமதி விலை டன்னுக்கு 300 டாலராக (ரூ.18000) நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் வெங்காயத்தின் குறைந்த பட்ச ஏற்றுமதி விலை டன்னுக்கு 30000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உருளை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு
கடந்த சில தினங்களுக்கு முன்பு உருளைக்கிழங்கு ஏற்றுமதியை கட்டுப்படுத்த அதற்கு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 450 டாலர் (ரூ.27000) என நிர்ணயித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதிகரித்த பணவீக்கம்
நாட்டின் பணவீக்கம் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.01 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றின் விலை உயர்வே பணவீக்கம் அதிகரிக்கக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறி, பழங்கள் விலை உயர்வு
உருளைக்கிழங்கின் விலை 31.44 சதவிகிதம் அதிகரித்ததும், பழங்கள் விலை 19.40 சதவிகிதம் மற்றும் அரிசியின் விலை 12.75 சதவிகிதம் அதிகரித்ததும் பணவீக்கம் அதிகரிக்கக் காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதிரடி நடவடிக்கை
அடுத்தவாரம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் விலைவாசியை கட்டுப்படுத்த மத்தியஅரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக மத்திய நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.