மணமகன் நடனமாட வற்புறுத்தியதால் திருமணத்தை பாதியில் நிறுத்திய மணப்பெண் !
கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் ஃப்ரோசாபாத் மாவட்டத்தில் உள்ள ரசூல்பூரில் துல்காபூரை சேர்ந்த ஜிதேந்திரா - குடியா ஆகியோருக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
அப்போது மணமகன் ஜிதேந்திரா மற்றும் அவரது உறவினர்கள் தங்களுடன் குத்தாட்டம் ஆட வருமாறு அழைத்தனர். இதற்கு மணமகள் குடியா மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜிதேந்திரா, மணமகளின் உறவினருடன் தகராறில் ஈடுபட்டதோடு மணமகளின் கன்னத்தில் அறைந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடியா, தனது மண மாலையை கழற்றி ஜிதேந்திராவின் முகத்தில் வீசி எறிந்துவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கினார். அத்துடன் திருமணத்தை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். மணமகன் ரவுடித்தனமாக நடந்து கொண்டதால் குடியாவின் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜிதேந்திரா மீண்டும் தகராறில் ஈடுபட்டார். அப்போது சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், ஜிதேந்திரா உள்பட மணமகன் வீட்டார் 6 பேரை கைது செய்தனர். பின்னர் குடியாவின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியதால் ஜிதேந்திராவும் அவரது உறவினர்களும் விடுவிக்கப்பட்டனர்.