கெஜ்ரிவால் போல என்னால் சமரசம் செய்து கொள்ள முடியாது- பிரசாந்த் பூஷன்
டெல்லி: அரசியலில் சில சமரசங்கள் செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகிறார். ஆனால் அதற்கு நான் தயாராக இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் பிரசாந்த் பூஷன் முதன்முறையாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,
கட்சியின் கொள்கைகள் குறித்து தான் தற்போது பிரச்சனை எழுந்துள்ளது. பிற அரசியல் கட்சிகளில் இருந்து வித்தியாசமான கட்சியை நாங்கள் துவங்கினோம். இங்கு ஒரு நபரை மையமாக வைத்து அனைத்தும் நடக்கக் கூடாது என்று இருந்தோம். எந்த ஒரு முடிவும் அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டும் என்று தீர்மானித்தோம்.
அரவிந்தின் அரசியல் தீர்வுகளை மதிக்கிறேன். ஆனால் சில சமயம் அவர் தவறாகக் கூறக்கூடும். ஆம் ஆத்மி கட்சி செயல்படும் முறையில் எனக்கு உடன்பாடு இல்லை. கட்சியின் செலவுக் கணக்கு மக்களுக்கு காண்பிக்கப்படுவது இல்லை. அரவிந்த் தனக்கேற்றவாறு செயல்படுகிறார். அரசியலுக்காக சில சமரசங்களை செய்ய வேண்டும் என்கிறார் அரவிந்த். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.
அரவிந்திடம் சிறப்பான குணங்கள் உள்ளது. அவர் தனித்துவம் வாய்ந்த தலைவர். அதே சமயம் அவருக்கு சில பலவீனங்களும் உள்ளது. அரசியலில் சமரசம் செய்யும் அவரது எண்ணம் சரி அல்ல. மீண்டும் காங்கிரஸின் ஆதரவை நாடுவதா வேண்டாமா என்பது குறித்து அரசியல் நடவடிக்கை குழு மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.
அரவிந்துடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய முயற்சித்து வருகிறோம். அரவிந்த் கெஜ்ரிவாலை கட்சியை விட்டு நீக்குவது பற்றி நானோ, யோகேந்திர யாதவோ எதுவும் கூறியது இல்லை. என்னையும், யாதவையும் கட்சியை விட்டு விலக்கினால் அது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
பாஜக ஊழல் கட்சி என்பது என் கருத்து. நான் ஜேட்லிக்கு எதிராக புகார் அளித்துள்ளேன். அதே சமயம் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது நலம் விசாரித்துள்ளேன். நான் ஜேட்லிக்கு நெருக்கமானவன் என்று கூறுவதில் உண்மை இல்லை. கிரண் பேடி குறித்த எனது தந்தையின் கருத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.
வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. ஜனநாயக முறைப்படி கட்சியில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். கட்சி மேலிடம் முன்பு மண்டியிட முடியாது. பிற கட்சிகளைப் போன்று கட்சி மேலிட கலாச்சாரத்தை பின்பற்ற முடியாது.
நான் கட்சியை விட்டு விலக முயற்சிக்கவில்லை. கட்சி உருவாக உழைத்தவர்கள் அது ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றார்.