கேரளாவில் தொடர் கனமழையால் வெள்ளப் பெருக்கு.. நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி
கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளனர்.
திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளனர்.
கேரளாவில் சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக இடுக்கி, கண்ணூர், மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பெருகிலும் நிலச்சரிவிலும் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.
இதில் இடுக்கி மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரிட மீட்பு மேலாண்மை அலுவலகம் அறிவித்துள்ளது. அதே போல, மலப்புரம் மாவட்டத்தில் 5 பேரும், கண்ணூர் மாவட்டத்தில் 2 பேரும் வயநாடு மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
தொடர் கனமழை காரணமாக கேரளாவின் இடமலையார் அணையிலிருந்து வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இடுக்கி அணை அதன் முழு கொள்ளளவான 169 மீட்டரையும் தாண்டி 169.95 மீட்டர் உயரம் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து இடுக்கி அணை சுற்றுவட்டாரப் பகுதிக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல கேரளா பேரிடர் மேலாண்மை ஆணையம் அணையின் நீர் மட்டம் 170 மீட்டர் உயர்ந்தால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு அணையின் நீர்மட்டம் குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இருப்பினும் கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இந்த இரு மாவட்டங்களும் மற்ற மாவட்டங்களிலிருந்து போக்குவரத்து துண்டிகப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கிலிருந்து மக்களைப் பாதுகாக்க மத்திய அரசின் உதவியைக் கோரியிருக்கிறார். மேலும், வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட இடங்களிலிருந்து மக்களை மீட்க பேரிடர் மீட்பு படையுடன் ஹெலிகாப்டர், கடற்படை உள்ளிட்ட ராணுவத்தின் உதவியையும் கோரியுள்ளார்.
மேலும், இன்று பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில், ஆலப்புழா, கோழிக்கோடு, எர்ணாக்குளம் ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.
கேரளாவில், கனமழை பெய்துவரும் இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளி தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் அறிவித்துள்ளார்.
இப்படி தொடர்ந்து கனமழையால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரளா அடுத்த 48 மணி நேரத்தில் கன மழையை எதிர்கொள்ளும் என்று ஸ்கைமெட் வெதர் வானிலை மையம் டிவிட் செய்துள்ளது. கேரளாவில் கடந்த செவ்வாய்க்கிழமை வரை 92 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது, கோழிக்கோட்டில் 20 மில்லிமீட்டரும் திருவனந்தபுரத்தில் 14 மில்லிமீட்டருரும், கர்வரில் 10 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.