கர்நாடகாவில் பாகுபலி-2 ரிலீஸ் ஆகனுமா.. சத்யராஜ் மன்னிப்பு கேட்கனும்.. கன்னட அமைப்புகள் மிரட்டல்
பெங்களூர்: கர்நாடகாவில் பாகுபலி-2 ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமானால், நடிர் சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, கன்னட அமைப்புகள் நிர்பந்தம் செய்து வருகின்றன.
பாகுபலி திரைப்படம் மெகா ஹிட் ஆன நிலையில், அதன் 2ம் பாகம், பாகுபலி-2 என்ற பெயரில் இன்னும் இரு வாரங்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில், பெங்களூர் உட்பட கர்நாடகா முழுக்க அப்படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில், சிறு, சிறு 2000 கன்னட அமைப்புகள் இணைந்து ஒரே குரலாக இந்த எதிர்ப்பை முன்வைக்கின்றன.
சத்யராஜ் பேச்சு
இதற்கு அந்த அமைப்புகள் சொல்லும் காரணம், காவிரி விவகாரத்தில் சத்யராஜின் நிலைப்பாடுதானாம். காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடாமல் உள்ள கர்நாடகாவை எதிர்த்து, சத்யராஜ் பேசியதுதான் இந்த எதிர்ப்புக்கு காரணம்.
மன்னிப்பு கோரிக்கை
காவிரி விவகாரத்தில் கன்னடர்களை அவமானப்படுத்தும் விதமாக சத்யராஜ் பேசிவிட்டார். எனவே, சத்யராஜ் மன்னிப்பு கேட்டால்தான் ரிலீஸ் செய்ய அனுமதி கொடுப்போம் என்று அறிவித்துள்ளனர் கன்னட சங்கத்தினர்.
எங்களிடம் பேசவில்லைங்க
இதுகுறித்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவரும், டாக்டர் ராஜ்குமார் ரசிகர் சங்க தலைவருமான சாரா.கோவிந்து, "இந்த விவகாரம் குறித்து இதுவரை கர்நாடக திரைப்பட வர்த்தகசபையை படத்தின் தயாரிப்பாளரோ அல்லது, சத்யராஜோ அணுகவேயில்லை. சத்யராஜ் மன்னிப்பு கேட்கும்வரை படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க மாட்டோம்" என கூறினார். ஆனால் சத்யராஜ் இதற்கெல்லாம் அசரக்கூடியவர் இல்லை என்று தமிழ் திரையுலகில் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
பின்னணி அரசியல்
பாகுபலி திரைப்படத்திற்கு பலத்த வரவேற்பு இருக்கும் என்பதால் கன்னட படங்கள் வியாபாரம் பாதிக்கும் என்பதால் சிலரின் தூண்டுதல் பேரில் இவ்வாறு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மொழி, மாநிலத்தின் பெயரால் எதிர்த்தால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்பதே இதன் பின்னணி அரசியல் என்ற பேச்சு கிசுகிசுக்கப்படுகிறது.