பவானிபூரில் கேம் ஸ்டார்ட்.. நாடு முழுக்க பாஜகவிற்கு முடிவுரை ஆரம்பம்.. மம்தா பானர்ஜி சூளுரை
கொல்கத்தா: பவானிபூரில் கேம் ஆரம்பித்து விட்டது, இந்திய அளவில் இது எதிர் தரப்பின் வெற்றிக்கு முடிவுரை எழுதும் என்று, மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு செப்டம்பர் 30ம் தேதி இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளது.
3 ஆக பிரிக்கப்பட்ட சென்னை காவல்துறை: ஆவடி, தாம்பரத்திற்கு இவர்கள் தான் சிறப்பு அதிகாரிகளா?
இந்தத் தேர்தலில் பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.
மம்தா பானர்ஜி தோல்வி
தமிழகம், மேற்கு வங்கம் உட்பட கடந்த ஏப்ரலில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலின்போது, நந்தி கிராம் தொகுதியில் போட்டியிட்டார் மம்தா பானர்ஜி. ஆனால், சுவேந்து அதிகாரி என்ற பாஜக வேட்பாளரிடம் 2000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மம்தா தோல்வியடைந்தார். சுவேந்து அதிகாரி, மம்தாவின் வலதுகரமாக இருந்து தேர்தலுக்கு முன்பு பாஜகவில் சேர்ந்தவராகும். அவர்தான், நந்தி கிராம் தொகுதியில் போட்டியிட முடியுமா என்று மம்தாவிற்கு சவால் விடுத்திருந்தார். அதை ஏற்று மம்தாவும் போட்டியிட்டார்.
எம்எல்ஏவாக வேண்டும்
மாநிலத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்துவிட்டது. ஆனால் முதல்வராக இருக்கும் மம்தா 6 மாதங்களுக்குள் எம்எல்ஏவாகுவது கட்டாயம். எனவே பவானிபூர் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். மேற்குவங்கத்தின் சாம்செர்காஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கும் 30ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதேபோல, ஒடிசாவின் பிபிலி தொகுதியிலும் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அக்டோபர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிக்கான கட்டாயத்தில் மம்தா பானர்ஜி
இந்க நிலையில், பவானிபூரில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் தனது பிரச்சாரத்தின்போது கூறுகையில், பவானிபூரில் புதிதாக ஒரு போட்டி ஆரம்பிக்க உள்ளது. இது மொத்த இந்தியாவிலும் எதிர் தரப்பு பெறும் வெற்றியை முடித்து வைக்கும். திரிணாமுல் காங்கிரசின் பிறப்பிடம், பவானிப்பூர்தான். இங்கிருந்து, ஒட்டுமொத்த நாட்டுக்கும் போராட்டத்தை நகர்த்த உள்ளேன். உத்தர பிரதேசம், பஞ்சாப், திரிபுரா, அசாம், டெல்லி மாநில மக்கள் குரல் அற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள், தங்கள் தேவைக்காக குரல் எழுப்பவோ போராடவோ ஆளில்லாத நிலையில் உள்ளனர். பாஜகவுக்கு நீங்கள் ஓட்டு போட்டால், தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற பெயர்களால், உங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் கூட இல்லாமல் செய்து விடுவார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மேற்கு வங்க மக்கள் எப்படி அரசியலில் இருந்து அகற்றினோமோ, அதேபோல பாஜகவுக்கும் செய்ய வேண்டிய தேவை உள்ளது.
மறைமுக உறவு
நான் 30 வருடங்களாக மார்க்சிஸ்ட் கட்சியை எதிர்த்து அரசியல் செய்து வருகிறேன். நான் காங்கிரசிலிருந்தபோது, அவர்கள் மார்க்சிஸ்ட் உடன் மறைமுக கூட்டு வைத்ததை அறிந்து கொண்டேன். எனவேதான் காங்கிரசிலிருந்து விலகி தனிக் கட்சி துவங்கினேன். இப்போது அவர்கள் பாஜகவுடனும் மறைமுக கூட்டு வைத்துள்ளார்கள். நான் உங்களுக்கெல்லாம் வாக்குறுதியளிக்கிறேன். பாஜகவை இந்த நாடு முழுக்க செல்வாக்கு இழக்க வைப்பேன். பாஜக நமது அன்புக்குரிய குஜராத் பகுதியை முற்றிலும் சீரழித்து விட்டனர். இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.