அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் மீதான பலாத்கார வழக்கு விசாரணைக்கு 2 வார தடை
பெங்களூர்: மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா மீதான பலாத்கார புகார் தொடர்பான குற்றப்பத்திரிக்கை மீது விசாரணை நடத்த மேலும் 2 வாரம் தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடாவுக்கும் குஷால்நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் நானய்யாவின் மகள் ராஜ்ஸ்ரீ என்கிற ஸ்வாதிக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் கார்த்திக் கவுடா தன்னை காதலித்து ரகசிய திருமணம் செய்து வேறு பெண்ணை மணக்க உள்ளார் என்று கூறி ஆர்.டி.நகர் காவல் நிலையத்தில் அவர் மீது பாலியல் பலாத்காரம், ஏமாற்றம், கடத்தல் புகார் அளித்தார் நடிகை மைத்ரி கவுடா.
அவரது புகாரின்பேரில் போலீசார் கார்த்திக் மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீசார் கடந்த மாதம் நீதிமன்றத்தில் கார்த்திக் கவுடா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
குற்றப்பத்திரிக்கை மீதான விசாரணை பெங்களூரில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி கார்த்திக் கவுடா சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த மாதம் 30ம் தேதி விசாரித்த நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கை மீது விசாரணை நடத்த 4 வாரம் தடை விதித்தது.
நீதிமன்றம் விதித்த தடை காலம் முடிவுக்கு வரும் நிலையில் கார்த்திக் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. கார்த்திக் கவுடாவுக்கு நாளை திருமணம் நடக்க உள்ளதால் குற்றப்பத்திரிக்கை மீதான விசராணைக்கு மேலும் 2 வாரம் தடை விதிக்குமாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கை மீதான விசாரணைக்கு மேலும் 2 வார காலம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.