ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 சி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!
ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி. சி 26 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1 சி செயற்கைக்கோள் வெற்றிகரமாக இன்று அதிகாலை விண்ணில் ஏவப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று அதிகாலை 1.32 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி 26 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆயிரத்து 425 புள்ளி 4 கிலோ எடைகொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 சி செயற்கைக்கோள் 20வது நிமிடத்தில் புவியின் சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சக விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் பாராட்டு தெரிவித்தார்.
கடல் வழிப்பாதை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பணிகளை கண்காணிப்பதற்காக, நேவிகேஷன் செயற்கைக்கோள் திட்டத்தின்படி 7 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே இரண்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ள நிலையில், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1 சி என்ற மூன்றாவது செயற்கைக் கோளும் தற்போது வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.