இந்தியா - பாக். பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும்: காஷ்மீர் சட்ட மேலவையில் தீர்மானம்!!
டெல்லி: பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் சட்டமேலவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் இதனை மீறி இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் இந்தியாவும், பாகிஸ்தானும் வருகிற 25-ந்தேதி இஸ்லாமாபாத் நகரில் வெளியுறவு செயலாளர்கள் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.
இந்நிலையில் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பாகிஸ்தான் தூதர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் இந்திய பாதுகாப்பு நிலைகளை மட்டுமே குறிவைத்து தாக்கி வந்த பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையோர பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களை அச்சுறுத்தும் விதமாக அவர்களது குடியிருப்புகள் மீதும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலுக்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எல்லையில் அமைதியை நிலவ செய்ய, மத்திய அரசு பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வலியுறுத்தி ஜம்மு காஷ்மீர் சட்டமேலவையில் வியாழன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
எல்லையில் நிலவும் வன்முறைகளை சரிசெய்ய மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்லையில் துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.