உச்சநீதிமன்றத்தின் பிடிவாரண்ட்.... கோர்ட்டில் ஆஜராகமாட்டேன்: நீதிபதி கர்ணன்
உச்சநீதிமன்றத்தின் பிடிவாரண்ட்டை ஏற்று நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டேன் என நீதிபதி கர்ணன் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் பிடிவாரண்ட்டை ஏற்று ஆஜராகப் போவதில்லை என கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு அவர் மாற்றப்பட்டார்.
ஆனால் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷண் கவுல் பிறப்பித்த உத்தரவை வழக்காக எடுத்து அதற்கு தடை விதித்தார் கர்ணன். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்துக்கு போனது. நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், அவரை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றியது.
அத்துடன் நீதிபதி கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்து அவரை ஆஜராக உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இரண்டு முறை உச்சநீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டும் நீதிபதி கர்ணன் அதை ஏற்கவில்லை.
இதனால் நீதிபதி கர்ணனுக்கு ஜாமீனில் வரக் கூடிய பிடிவாரண்ட்டை கடந்த வாரம் உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. இது தொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய நீதிபதி, என் மீது தானாக முன்வந்து உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்கு பதிவு செய்திருப்பது என்னை தொல்லை செய்வதற்குத்தான். மார்ச் 31-ந்தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகவும் மாட்டேன் என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.