தோல்வி பயம்.. 2 தொகுதிகளில் சித்தராமையா போட்டி.. 6 தொகுதிகளில் காங். வேட்பாளர் மாற்றம்
Recommended Video
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 தொகுதிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
மைசூர் மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையாவும் அவர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட அதே மாவட்டத்தின் வருணா தொகுதியில், மகன் யத்தீஷும் போட்டியிடுவதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்திருந்தது.
ஏற்கனவே இத்தொகுதியில் சித்தராமையா 7 முறை போட்டியிட்டு அதில் 5 முறை வெற்றிபெற்றுள்ளார். ஆனாலும், 2006 இடைத் தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் வெறும் 257 வாக்குகள் வித்தியாசத்தில்தான் சித்தராமையா வெற்றி பெற்றார்.
கடும் நெருக்கடி
சித்தராமையாவின் சொந்த மாவட்டமான மைசூரில் அவரை தோற்கடித்தே தீர வேண்டும் என்று பிற கட்சி தலைவர்கள் மும்முரமாக பணியாற்றியதுதான், அவரை இந்த அளவுக்கு நெருக்கடிக்கு உள்ளாக்கிவிட்டது. இதனால்தான் அதன்பிறகு வருணா தொகுதியில் இருந்து போட்டியிட முடிவு செய்தார். ஆனால், இம்முறை பாதுகாப்பான தனது வருணா தொகுதியை மகனுக்கு ஒதுக்கிவிட்டு, சாமுண்டீஸ்வரி தொகுதிக்கே திரும்பினார் சித்தராமையா.
மீண்டும் சித்தராமையாவுக்கு கட்டம்
இருந்தாலும், விடவில்லை எதிர்க்கட்சியினர். எடியூரப்பா, குமாரசாமி என பாஜக, மஜத கட்சி தலைவர்கள், சித்தராமையை வீழ்த்தியே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டினர். ஜாதி வாக்கு வங்கி கணக்குகளும் எடியூரப்பாவுக்கும், குமாரசாமிக்குமே சாதகமாக உள்ளன. எனவே, அச்சத்திலுள்ள சித்தராமையா காங்கிரஸ் மேலிடத்தை நிர்பந்தம் செய்து, மற்றொரு தொகுதியில் போட்டியிடும் முடிவுக்கு வந்தார்.
ஜாதி கணக்கு
வட கர்நாடகாவின் பாகல்கோட்டை மாவட்டத்திலுள்ள பாதாமி என்ற தொகுதியில் சித்தராமையா போட்டியிட விரும்பியதால் அதற்கு கட்சி மேலிடமும் சம்மதித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாதாமி தொகுதியில், சித்தராமையாவின் ஜாதியான குருபர்கள் அதிகம் உள்ளனர். எனவே இதில் வெற்றி உறுதி என்று நினைக்கிறார் சித்தராமையா. உளவுத்துறை மூலம் தகவல்களை திரட்டியபோது அந்த அறிக்கையும் சித்தராமையாவுக்கு சாதகமாகவே வந்துள்ளது.
மோடியும் இரு தொகுதிகளில் போட்டி
இதனிடையே சித்தராமையா இரு தொகுதிகளில் போட்டியிடுவதை பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர்கள் கேலி செய்தாலும், பிரதமர் மோடி, லோக்சபா தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டதை சுட்டிக் காட்டி பதிலடி கொடுக்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். பின்தங்கிய வட கர்நாடகாவில் சித்தராமையா போட்டியிட வேண்டும், இதன் மூலம் அந்த மண்டலத்திற்கு அதிக வளர்ச்சி கிடைக்க வாய்ப்பு உருவாகும் என்பது மக்களின் கோரிக்கை என்று சொல்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். ஆனால், உண்மையான காரணம், சித்தராமையாவின் தோல்வி பயம்தான் என்கிறார்கள் கர்நாடக அரசியல் பார்வையாளர்கள்.
6 தொகுதிகளில் வேட்பாளர் மாற்றம்
இதேபோல 6 தொகுதிகளில் ஏற்கனவே அறிவித்த வேட்பாளர்களை பல்வேறு காரணங்களுக்காக மாற்றி புது பட்டியலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ். மேலும், நிலுவையில் வைத்திருந்த பெங்களூர் சாந்திநகர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் கூட காங்கிரஸ் அறிவித்துள்ளது. சாந்திநகரில் சிட்டிங் எம்எல்ஏ, ஹாரீஷுக்கு மீண்டும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இவரது மகன் அடிதடி வழக்கில் கைதாகியிருந்த நிலையில், அவருக்கே மீண்டும் சீட் கொடுக்க காங்கிரஸ் மேலிிடம் தயங்கியபடி இருந்தது. ஆனால், சித்தராமையாவுக்கு நெருக்கமான ஹாரீஷ் தனது செல்வாக்கு மூலம் மீண்டும் சீட் பெற்றுவிட்டார்.
வங்கி மோசடி வழக்கு
அதேநேரம், குடகு மாவட்டம், மடிகேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்ட பிரபல வழக்கறிஞர் சந்திரமவுலி பெயரை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது காங்கிரஸ். சந்திரமவுலி, வங்கி மோசடி வழக்கில் தொடர்புள்ள நீரவ்மோடியின் உறவினர் மெகுல் சோக்சிக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டு வருபவர். இந்த சர்ச்சை பெரிதானதால் வேட்பாளர் மாற்றப்பட்டு சந்திரகலா என்பவர் அத்தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.