சுதந்திர இந்தியாவின் ”முதல் எம்.பி” ரிஷாம்லால் ஜாங்காடே மரணம்!
ராய்ப்பூர்: சுதந்திர இந்தியாவின் முதல் லோக்சபா எம்.பிக்களில் ஒருவரான ரிஷாம்லால் ஜாங்காடே உடல் நலக்குறைவால் காலமானார்.
நாடு சுதந்திரமடைந்த பின்னர் பிரிவினையாகாத மத்திய பிரதேச மாநிலத்தில் ராய்பூர் மாவட்டத்தில் உள்ள பிலாய்கார் கிராமத்தைச்சேர்ந்தவர் ரிஷாம்லால் ஜாங்காடே.
தற்போது 90 வயதான இவர் சுதந்திர போராட்ட தியாகி ஆவார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று போராட்டம் நடத்தினார். நாடு சுதந்திரமடைந்து 1951-52 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு முதல் லோக்சபா தேர்தல் நடந்தது.
காங்கிரஸ் கட்சி சார்பில் பிலாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்ட ரிஷாம்லால் ஜாங்காடே லோக்சபாவின் முதல் எம்.பியாக தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் ராய்ப்பூரில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜாங்காடே சிகிச்சை பலனின்றி காலமானார்.இவரது மறைவுக்கு சட்டீஸ்கர் முதல்வர் ரமன்சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.