130 வயதில் 7 வாக்காளர்கள்..... 13 வயதில் ஒரு வாக்காளர்: தேர்தல்அதிகாரிகள் குழப்பம்
போபால்: மத்திய பிரதேசத்தில் ஏழு வாக்காளர்கள் 130 வயதில் இருப்பதாகவும், ஒரு வாக்காளரின் வயது 13 எனவும் வாக்காளர் அட்டை தயாராகியுள்ளது சர்ச்சையில் சிக்கியுள்ளது. குறிப்பிடப் பட்ட அந்த 7 வாக்காளர்களின் வயதைச் சரிபார்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உலக முதியோர் தினமான இன்று, முதியோர் மதிக்கப் பட வேண்டும், பேணிப்பாதுகாக்கப் பட வேண்டும் என ஆங்காங்கே விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் மத்தியப்பிரதேசத்தில் வயது விவகாரத்தில் புதிய பிரச்சினை ஒன்று உருவாகியுள்ளது.
அம்மாநிலத்தில் வழங்கப்பட தயாராக இருக்கிற வாக்காளர் அடையாள அட்டைகளில் ஏழு பேருடைய வயது சுமார் 130 எனக் குறிப்பிடப் பட்டுள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கின்னஸ் ரெக்கார்ட் படி....
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மிஷோ ஒகாவா என்ற 115 வயதுக்காரர் தான் உலகிலேயே வயதான மனிதர் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்நிலையில் 130 வயதைத் தாண்டியவர்கள் என 7 பேருக்கு வாக்காளர் அட்டை தயாராகி இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெவ்வேறு பகுதி வாக்காளர்கள்....
130 வயதைக் கடந்தவர்கள் என வாக்காளர் அட்டை தயாராகியுள்ளவர்களின் பெயர் விபரமாவது, பல்வீர், பேட்கோ கோல், சுதிர்குமார், அபேய் அலிராஜ்பூர், வெஸ்டா தார், சந்த்மால் நீமூச் மற்றும் மாணிக் குல்கர்னி. இவர்கள் அனைவரும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அலுவலக குளறுபடி...
இது குறித்து ஆச்சர்யம் தெரிவித்துள்ளார் அலிராஜ்பூர் தேர்தல் அதிகாரியான சந்திரசேகர் சுக்லா. மேலும் இது குறித்து அவர் கூறுகையில், ‘நிச்சயமாக இதற்கு வாய்ப்பே இல்லை. இது அலுவலக விஷயத்தில் ஏற்பட்ட ஏதோ குளறுபடியின் விளைவு தான். ஜப்பானில் தான் உலகிலேயே வயதானவர் வாழ்ந்து வருவதாக நான் கேள்விப் பட்டிருக்கிறேன். எனவே, இந்தத் தவறுகள் விரைவில் சரி செய்யப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.
தொடரும் சந்தேகம்...
இது குறித்து மற்றொரு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த ஏழு பேருடைய வயது குழப்பம் மட்டும் இல்லை. இன்னும் இதே போன்று மேலும் 34 பேருடைய வயதுமே சந்தேகத்தை உண்டாக்கியுள்ளது. எனவே, விரைவில் விசாரணையை மேற்கொண்டு, தவறான தவறுகள் திருத்தப் படும்' என்றார்.
வயது சரிபார்க்கும் பணி...
இதனைத் தொடர்ந்து மொரினா மாவட்டத்தில் உள்ள 99 வயதுக்கு மேற்பட்ட வயதுடையவர்களாகக் கருதப்படுபவர்களின் வயதைச் சரி பார்க்கும் பணி ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இக்கு மட்டும் சுமார் 85 வாக்காளர்கள் 99 வயதுக்கும் அதிகமானவர்கள் என வாக்காளர் அட்டையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
வாக்காளர் அட்டை....
மீண்டும் ஒருமுறை வயது விவரங்கள் சரிபார்க்கப் பட்ட பின்னரே அனைவருக்கும் வாக்காளர் அட்டை வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
13வயதில் வாக்காளர்....
அதிக வயதாக பதிவானது தான் தவறு என்றால், ராஜ்கார் மாவட்டத்தில் வாக்காளர் ஒருவரின் வயது 13 என குறிப்பிடப் பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
முதியவர்கள்....
மத்தியப்பிரதேசத்தில் சுமார் 42,094 வாக்காளர்களுக்கு வயது 90க்கும் மேல் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஆதார் அட்டை குளறுபடிகள்....
அரசு இயந்திரங்களில் தவறுகள் நடப்பது சகஜம் தானே. சமீபத்தில் ஆதார் அட்டையில் நாய், சேர், மரம் என புகைப்படங்கள் பதிவாகி இருந்ததி நாம் இங்கு ஞாபகப் படுத்திக் கொள்ளலாம்.