முண்டியடிப்பு, தடியடி, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் நடந்த கேகேஆர் பாராட்டு விழா
கொல்கத்தா: ஐபிஎல் 7வது சீசனில் கோப்பையை வென்ற கொல்கத்தா அணியை பாராட்டும் விதமாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று பிரமாண்ட விழா நடத்தி வீரர்களை கௌரவப்படுத்தினார். இந்நிலையில் விழாவை காண முண்டியடித்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
ஐபிஎல் 7வது சீசனில் நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றது. இதையடுத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கொல்கத்தா அணிக்கு ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.
கொல்கத்தா அணி தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் உள்ளார் மமதா.
பாராட்டு விழா
பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று கொல்கத்தா அணிக்கு ஜூன் 3ம் தேதி(இன்று) பாராட்டு விழா நடத்தப்படும் என்று மமதா ட்விட்டரில் தெரிவித்தார். அதன்படி இன்று பாராட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தினார்.
தடியடி
பாராட்டு விழா பிரமாண்டமான முறையில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் இன்று நடைபெற்றது. விழா நடந்த இடத்திற்கு நுழைவு கட்டணம் இல்லை என்பதால் ரசிகர்கள் தடுப்புகளை மீறி அரங்கிற்குள் நுழைய முண்டியடித்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களை கலைந்து போகச் செய்தனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் காயம் அடைந்தனர்.
பரிசுகள்
மமதா கொல்கத்தா அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் மாம்பழம், இனிப்புகள், சால்வை மற்றும் 12 கிராம் தங்க மோதிரம் வழங்கி வாழ்த்தினார்.
ஷாருக்கான்
விழாவில் ஷாருக்கான், தனது தோழியும் அணியின் இணை உரிமையாளருமான நடிகை ஜூஹி சாவ்லாவுடன் கலந்து கொண்டார்.
கடந்த ஆண்டும்
கொல்கத்தா அணி கடந்த ஆண்டும் கோப்பையை வென்றபோது அவர்களுக்கு மமதா பாராட்டு விழா நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.