இந்தியாவில் ‘ராணுவ புரட்சிக்கான சூழ்நிலை ஒருபோதும் ஏற்படாது’ - ஏ.கே.அந்தோணி
டெல்லி: இந்தியாவில் ராணுவப்புரட்சிக்கான சூழ்நிலை ஒருபோதும் ஏற்படாது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தினரின் 2 பிரிவினர் 2012-ம் ஆண்டு டெல்லியை நோக்கி படையை நகர்த்தியதாக புதிய சர்ச்சை எழுந்தது. இதுபற்றி கருத்து தெரிவித்த ராணுவ தளபதி ஏ.கே.சவுத்ரி, இந்த பிரச்சினை தொடர்பாக மத்திய அரசுக்கும், ராணுவத்துக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக கூறினார்.
இந்த நிலையில் கொச்சியில் கடலோர காவல்படை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 7 ஆண்டுகளாக நான் இந்திய பாதுகாப்பு படையினருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். ராணுவம், கப்பல் படை, விமானப்படை மற்றும் கடலோர காவல் படையில் உள்ள உயரதிகாரிகளிடம் மட்டுமல்லாமல் சாதாரண சிப்பாயிடமும், எல்லைப் பகுதியில் பணிபுரிபவர்களிடமும் பழகியிருக்கிறேன்.
இந்தியாவில் ராணுவப்புரட்சி ஏற்படுவதற்கான சூழ்நிலை ஒருபோதும் ஏற்படாது. இந்திய ராணுவம் ஒரு பொறுப்புள்ள படை என்பதை நான் உறுதியுடன் கூறுவேன். ராணுவம் செயல்படுவதற்காக ஒரு முடிவு எடுக்கும்போது, மக்களாட்சி அரசு எடுக்கும் அனைத்து கொள்கைகளுக்கும் நிச்சயம் கட்டுப்படும். எனவே எதற்காகவும் கவலைப்படத் தேவையில்லை.
ராணுவம் டெல்லியை நோக்கி படையை நகர்த்தியது வழக்கமான பயிற்சி தான். அது முடிந்துபோன விவகாரம். ராணுவத்தின் மீது நான் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
இவ்வாறு ஏ.கே.அந்தோணி கூறினார்.