வெளிநாடுகளில் மோடிக்கு மிகப்பெரும் கவுரவம் கிடைக்கிறது.. பாராட்டிய கெலாட்! உற்று கவனித்த காங்கிரசார்
ஜெய்ப்பூர்: எந்த வெளிநாட்டுக்கு பிரதமர் மோடி சென்றாலும் அங்கு அவருக்கு மிகப்பெரிய கவுரவம் அளிக்கப்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் பேசினார். இதேபோல் பிரதமர் மோடியும் அசோக் கெலாட்டை பாராட்டி பேசினார்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த போது ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுதந்திர வேட்கையுடன் போராட்டங்கள் நடைபெற்றது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரம் கோரி போரிட்டவர்களில் பில் எனப்படும் பழங்குடியின சமூக மக்களும் அடங்குவர்.
மோர்பியில் மோடி.. நேராக வண்டியை விட்ட பிரதமர்! குஜராத் பாலம் விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு
1500 பேர் பலி
இதனால், கோபம் அடைந்த ஆங்கிலேயர்கள் கடந்த 1913-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி மங்கார் என்ற பகுதியில் வைத்து பில் பழங்குடியின மக்களுக்கு எதிராக தாக்குதலை நடத்தினர். கண்மூடித்தனமாக ஆங்கிலேய படைகள் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 1,500 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டனர். இந்த துயர சம்பவத்தை நினைவுரும் வகையில் ராஜஸ்தானின் பன்ஸ்வாரா பகுதியில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒரே மேடையில் மோடி, கெலாட்
இதில் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் பங்கேற்றனர். ஒரே மேடையில் பிரதமர் மோடியும், அசோக் கெலாட்டும் அருகருகே அமர்ந்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அசோக் கெலாட் பிரதமர் மோடி எந்த நாட்டுக்கு சென்றாலும் அவருக்கு மிகப்பெரிய கவுரவம் கொடுக்கப்படுவதாக பாராட்டி பேசினார். இது தொடர்பாக நிகழ்ச்சியில் அசோக் கெலாட் பேசியதாவது:-
காந்தியின் தேசம்
பிரதமர் மோடி எந்த நாட்டுக்கு சென்றாலும் அவருக்கு மிகப்பெரும் கவுரவம் தரப்படுகிறது. ஏனென்றால் காந்தியின் தேசம் மற்றும் ஜனநாயகம் ஆழமாக வேரூன்றிய தேசத்தில் இருந்து வந்திருக்கிறார் என்பதற்காக இந்த மரியாதை மோடிக்கு கிடைக்கிறது" என்றார்.
அசோக் கெலாட்டை புகழ்ந்த மோடி
அதன்பிறகு பேசிய பிரதமர் மோடி, அசோக் கெலாட்டை பதிலுக்கு புகழ்ந்து தள்ளினார். பிரதமர் மோடி கூறுகையில், முதல்வராக நானும் அசோக் கெலாட்டும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். பல முதல்வர்களில் அசோக் கெலாட் மிகவும் சீனியர் முதல்வராக இருந்தார். இப்போது முதல்வராக இருப்பவர்களில் கூட மிகவும் சீனியர் முதல்வராக அசோக் கெலாட் இருக்கிறார். அசோக் கெலாட் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியும் கூட" என்றார்.
மிகப்பெரும் கொடூரமான சம்பவத்திற்கு..
அரசியல் ரீதியாக எதிரும் புதிருமான கட்சியில் இருந்தாலும் பிரதமர் மோடியும் அசோக் கெலாட்டும் பரஸ்பரம் பாராட்டி பேசியது அரசியல் நாகரீகத்தை பறைசாற்றும் வகையில் இருந்தது. இதையடுத்து 1913- ஆம் ஆண்டின் துயர சம்பவம் குறித்து பேசிய பிரதமர் மோடி, 'பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடந்த மிகப்பெரும் கொடூரமான சம்பவத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.
முழுமை அடையாது
பழங்குடியின மக்களின் போராட்டத்திற்கும் தியாகத்திற்கும் இந்திய சுதந்திர வரலாற்றில் சரியான இடம் அளிக்கப்படவில்லை. பல தசாப்தங்களுக்கு முந்தைய இந்த தவறை இன்று இந்த தேசம் திருத்திக் கொண்டு வருகிறது. பழங்குடியின மக்கள் இன்றி இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம் எதிர்காலம் முழுமை அடையாது" என்றார்.