கொரோனாவை குணமாக்கும் என நினைத்து.. மண்ணெண்ணெய் குடித்த டெய்லர் பரிதாப உயிரிழப்பு!
போபால்: கொரோனாவை குணமாக்கும் என்று நினைத்து மண்ணெண்ணெய் எடுத்து குடித்த டெய்லர் பரிதாபமாக இறந்தார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை பாடாய்படுத்தி வருகிறது. இதனால் தினமும் ஏராளாமான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன.
தவறால் பறிபோகும் உயிர்கள்
கொரோனா பாதித்தவர்கள் கூட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்புகின்றனர். ஆனால் தனக்கு கொரோனா வந்து விடும் என்று பயந்து மற்றவர்களின் வதந்தியை நம்பி போலி மருந்துகள், சம்பந்தமே இல்லாமல் போலி பொருட்களை உட்கொண்டு பலர் உயிரிழந்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு எலுமிச்சை சாறை மூக்கில் விட்டால் கொரோனா வராது என்று அதனை செய்த ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விடாத காய்ச்சல்
இதே போல் வேறு ஒரு ஒருவரின் தவறான கருத்தை நம்பி அதனை செய்து டெய்லர் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலின் சிவ் நகர் ஹினோட்டியா பகுதியில் வசித்து வந்தவர் மகேந்திரா. இவருக்கு கடந்த வாரம் ஐந்து நாட்கள் வரை காய்ச்சல் இருந்தது. இதற்காக மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் அவருக்கு நீண்ட நாட்கள் காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் தனக்கு கொரோனா வந்திருக்கும் என நினைத்தார் மகேந்திரா.
மண்ணெண்ணெய் குடித்தார்
''மண்ணெண்ணெய் கொரோனா வைரஸைக் கொல்லும். அதனை பருகு'' என்று மகேந்திரனிடம் பழகிய ஒருவர் தவறான தகவல் ஒன்றை தெரிவித்தார். இதனை உண்மை என்று நம்பிய மகேந்திரன் மண்ணெண்ணெய் எடுத்து கடகடவென்று குடித்தார். இதனை தொடர்ந்து அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் பதறிப்போன குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் எங்கும் படுக்கைகள் காலியாக இல்லை.
பரிதாப உயிரிழப்பு
கடைசியாக இரண்டு நாட்களுக்கு முன்பு அசோகா கார்டனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தபோது மகேந்திரா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். முன்னதாக பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்ற தகவலும் தெரியவந்தது. தவறான தகவலை உண்மை என நினைத்து அதனை செய்த டெய்லர் பரிதாபமாக உயிரை விட்டுள்ளார். மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் எந்த பொருட்களையும், மருந்துகளையும் உட்கொள்ள கூடாது என்று தொடர்ந்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் இதனை காதில் வாங்காமல் பலர் உயிரிழந்து வருவது வேதனையை அளிக்கிறது.