மோடி சொன்ன மாதிரி செல்ஃபி எடுத்தா போதுமா? கேட்கிறார் நடிகை நேஹா துபியா
மும்பை: நல்ல நிர்வாகம் என்பது மக்களுடன் செல்பி எடுத்துக்கொள்வதோ அல்லது மக்களை யோக செய்ய சொல்வதோ இல்லை. மாறாக பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தான் உள்ளது என்று நடிகை நேகா துபியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. ஏராளமானோர் வரவேற்றும், திட்டியும் தங்களின் கமெண்டுகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். நேகா துபியா என்ற பெயர் நேற்று மாலையில் ட்விட்டரில் டிரெண்ட் ஆனது.
பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி #SelfieWithDaughter பிரச்சாரத்தை தொடங்கினார். ஏராளமானோர் தங்களின் பெண் குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்து ட்விட்டரில் பதிவிட்டனர்.
இதனை நடிகை ஸ்ருதி சேத் ட்விட்டரில் விமர்சித்தார், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது அடங்குவதற்குள்ளாக, முன்னாள் மிஸ் இந்தியாவும் நடிகையுமான நேஹா துபியா நேற்று மோடி அரசை கிண்டலடித்து ட்விட்டரில் கருத்திட்டுள்ளார். இது பலரையும் கவர்ந்து வருகிறது, ஏராளமானோர் நேகாவை விமர்சனமும் செய்துள்ளனர்.
|
மும்பை கனமழை
மும்பையில் பெய்த கடும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பதித்துள்ள நிலையில் நடிகை நேஹா துபியா தனது ட்விட்டர் பக்கத்தில் "ஒரே ஒரு மழை மொத்த நகரத்தையும் ஸ்தம்பிக்கவைத்துவிட்டது. நல்ல நிர்வாகம் என்பது மக்களுடன் செல்பி எடுத்துக்கொள்வதோ அல்லது மக்களை யோக செய்ய சொல்வதோ இல்லை. மாறாக பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தான் உள்ளது" என கூறியுள்ளார்.
|
ஆதரவும் எதிர்ப்பும்
இந்த டுவிட்டை பதிந்த சில மணி நேரத்திலேயே பல நூறு ட்விட்டர்வாசிகள் இதை பகிர்ந்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். ஒரு சிலரோ, நேகா இப்போதுதான் மழையை பார்க்கிறாரா என்று கேட்டுள்ளனர்.
|
என்ன ஒரு விளம்பரம்
நடிக்க வாய்ப்பு இல்லாத நடிகைகள் எல்லாம் இப்படி மோடியை திட்டி மலிவான வகையில் விளம்பரம் தேடிக்கொள்கின்றனர் என்று கேட்டுள்ளனர்.
|
மட்டமான கமெண்டுகள்
சிலரோ தங்களின் கமெண்டுகளை மட்டமாக பதிவிட்டுள்ளனர். இதுக்கெல்லாம் மதிப்பே குடுக்காதீங்கப்பா... இது மாதிரி ‘பி' கிரேடு நடிகைகளின் கருத்துக்களை கவனத்தில் கொள்ள வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார் ஒருவர். அப்போ ‘ஏ' கிரேடு நடிகைகள் மோடியை கிண்டலடிக்கலாமா என்று கலாய்த்துள்ளார் ஒருவர்.