சபரிமலையில் கடும் குளிரிலும் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்
சபரிமலை: சபரிமலையில் கடந்த 3 நாட்களாக கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று பக்தர்கள் 8 மணிநேரம் வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.
மண்டலபூஜைக்காக சபரிமலை நடை திறந்து 22 நாட்களில் வருமானம் 77.25 கோடி ரூபாயாக உயர்ந்தது. இது கடந்த ஆண்டை விட சுமார் பத்து கோடி ரூபாய் அதிகமாகும்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. மண்டல பூஜைக்கு இன்னும் 16 நாட்களே இருப்பதால் சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
குவியும் பக்தர்கள்
பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் பம்பையில் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இதனால் அனைத்து வாகனங்களும் நிலைக்கல் பகுதிக்கு திருப்பி விடப்பட்டன. இதன் காரணமாக நிலைக்கல் முதல் பம்பை வரை கடும் போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது.
சபரிமலையில் நடை திறப்பு
பக்தர்களின் வருகையை அடுத்து கடந்த 3 நாட்களாக சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நள்ளிரவு 11.50 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
8 மணிநேரம் காத்திருப்பு
நேற்று காலை 8 மணிக்கு சபரிமலைக்கு வந்த பக்தர்களால் மாலை 4 மணிக்குப் பின்னரே தரிசனம் செய்ய முடிந்தது. பல மணிநேரம் வரிசையில் காத்திருந்ததால் பெரும்பாலான பக்தர்கள் களைப்படைந்தனர்.
பதினெட்டாம்படியில்
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி சுமந்து வரும் அய்யப்ப பக்தர்கள் 18ஆம்படி ஏறிச்சென்று சாமியை தரிசித்து வருகிறார்கள். 18ஆம் படிகளில் கேரள போலீசார் பணியமர்த்தப்பட்டு பக்தர்களை வேகமாக அனுப்பி வந்தனர். ஆனால் மண்டல பூஜை விழா காலத்தில் இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வண்ணம் உள்ளதால், கேரள போலீசாரால் பக்தர்களை படியேற்றிவிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் பக்தர் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை நிலவியது.
மத்திய போலீஸ் படையினர்
கடுங்குளிரிலும் பம்பையில் நீராடி, மழையிலும் நனைந்தவாறு வெகுநேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் பலர் மலையேறி வந்த களைப்பு, பசியால் தவித்து வந்தனர். பெரிய நடைப்பந்தல் மற்றும் இணையதள முன்பதிவு கூப்பன் மூலம் செல்லும் பக்தர்கள் வரிசையும் நீண்டு காணப்பட்டது. அதைத் தொடர்ந்து மத்திய போலீஸ் படையினர் பக்தர்களை பதினெட்டாம் படி ஏற்றி விடும் பொறுப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
நிமிடத்திற்கு 110 பக்தர்கள்
மத்திய போலீஸ் படையினர் இப்பொறுப்பை ஏற்ற பிறகு, பதினெட்டாம் படியேற முடியாமல் தவிக்கும் பக்தர்களை தூக்கிவிட்டு விரைவாக சாமி தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதுவரை ஒரு நிமிடத்திற்கு 90 பக்தர்கள் வீதம் படியேறிச் சென்ற நிலையில், தற்போது 110 பக்தர்கள் வீதம் அனுப்பப்பட்டு வருகிறார்கள். ஆனால் பக்தர்கள் வருகை சாதாரணமாக இருக்கும்போது ஒரு நிமிடத்திற்கு 30 அல்லது 40 பக்தர்கள் மட்டுமே அனுப்பப்பட்டு வந்தனர்.
வருமானம் அதிகரிப்பு
பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் தேவசம்போர்டின் வருமானமும் அதிகரித்துள்ளது. கடந்த 22 நாட்களில் மொத்த வருமானம் 77 கோடியே 25 லட்சத்து 7ஆயிரத்து 713 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் பத்து கோடி ரூபாய் அதிகமாகும்.
குவியும் காணிக்கை
அதிகபட்சமாக அரவணை விற்பனையில் 31 கோடியே 33 லட்சத்து 55 ஆயிரத்து 840 ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே கால அளவில் இது 26.54 கோடியாக இருந்தது. காணிக்கையாக 27 கோடியே 65 லட்சத்து 71 ஆயிரத்து 451 ரூபாய் கிடைத்தது. கடந்த ஆண்டு இது 23.27 கோடி ரூபாயாக இருந்தது. அப்பம் விற்பனையில் 5.76 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு 5.53 கோடி ரூபாயாக இருந்தது. இதனை சபரிமலை நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அரவணை பிரசாதம்
அரவணை தற்போது 8 லட்சம் டின் ஸ்டாக் உள்ளது. கூட்டம் தொடர்ந்து அதிகமாக உள்ளதால் ஒரு பக்தருக்கு அதிகபட்சம் 50 டின் என கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரவணை உற்பத்தியை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அப்பம் தேவையான அளவு தினமும் தயாரிக்கப்படுவதால் அதில் தட்டுப்பாடு ஏற்படாது என்றார்.
கலைநிகழ்ச்சிகள்
சபரிமலை சன்னிதானத்தில் உள்ள தர்மசாஸ்தா ஆடிட்டோரியத்தில் பக்தர்கள் நேர்ச்சையாக கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தேவசம்போர்டு வாய்ப்பு வழங்கி உள்ளது. இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் பஜனை பாடி ஐயப்பனை வழிபடுகின்றனர்.
கண்ணைக் கட்டி கரகாட்டம்
பாரம்பரிய நடனம், பஜனை, பக்தி கான மேளா, சங்கீத கச்சேரி, வாத்திய இசை கச்சேரி போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளையும் பக்தர்கள் நடத்தி வருகின்றனர். சில பக்தர்கள் கண்ணைக்கட்டிக்கொண்டு கரகாட்டம் ஆடியது பக்தர்களை மட்டுமல்லாது காவல்துறையினரையும் கவர்ந்தது.