முத்துகிருஷ்ணன் மன உளைச்சலில் இருந்துள்ளார்: தற்கொலைக்கு காரணம் சொல்லும் டெல்லி காவல்துறை
முத்துகிருஷ்ணன் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார் என்பது நண்பர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று டெல்லி காவல்துறை கூறியுள்ளது.
டெல்லி: சேலம் சாமிநாதப்புரத்தைச் சேர்ந்த ஜீவானந்தத்தின் மகன் முத்துக்கிருஷ்ணன். 30 வயதான இவர் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆய்வு படிப்பு படித்து வந்தார்.
ஹோலி கொண்டாட்டத்திற்காக திங்கள்கிழமை டெல்லியில் முனிர்கா என்ற இடத்தில் உள்ள தனது நண்பர் அறைக்கு சென்றுள்ளார். பின்னர் மர்மமான முறையில் அந்த வீட்டின் அறையில் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டார். முத்துகிருஷ்ணன் உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த நகரின் தெற்கு மண்டல துணை கமிஷனர் ஈஸ்வர் சிங் கூறியது:
டெல்லியில் முத்துகிருஷ்ணன் ஹோட்டல் ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்த்துள்ளார். முத்துகிருஷ்ணன் டெல்லிக்கு வந்து 5 மாதங்கள்தான் ஆகியுள்ளது. அவருக்கு வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் சிலர் பழக்கமாகியுள்ளனர்.
முத்துகிருஷ்ணன் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார் என்பது நண்பர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பல தகவல்களை அறிந்துகொள்ள, பேஸ்புக் பக்கம், செல்போன் அழைப்புகள் ஆய்வு செய்யப்படுகிறது.
முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்ட இடத்தில் தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. எனவே அவரது தற்கொலைக்கான காரணம் என்றும் தெரியவில்லை. முத்துகிருஷ்ணன் வசித்த அறையில் போலீசார் நன்கு சோதனையிட்டு பார்த்துவிட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications