விடாது துரத்தும் விலைவாசி... அன்று வெங்காயம்- இன்று பருப்பு..பீகார் தேர்தலை நினைத்து பதறும் பா.ஜ.க.
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வரும் நிலையில் விண்ணை முட்டும் பருப்பு விலை விவகாரம் பாரதிய ஜனதாவை பெரும் கவலையில் மூழ்க வைத்துள்ளது.
பீகாரில் 5 கட்டமாக சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் 2 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது. பீகாரில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது பா.ஜ.க.வின் கனவு.
ஆனால் தேர்தல் கருத்து கணிப்புகளோ, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் நிதிஷ்-லாலு அணிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்றும் பா.ஜ.க. வெல்வது சந்தேகம் என்றும் கூறி வருகிறது.
இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் பருப்பு விலை உயர்ந்துள்ள விவகாரம் பீகார் தேர்தலில் எதிரொலிப்பதால் பா.ஜ.க. பெரும் கவலை அடைந்துள்ளது. அதுவும் மத்தியில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சியுடன்தான் பா.ஜ.க. பீகார் தேர்தல் களத்தில் இருக்கிறது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்து விளாசிவருகின்றனர் முதல்வர் நிதிஷ்குமாரும் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவும். இது வாக்காளர்களிடத்தில் ஒர்க் அவுட் ஆகியும் இருக்கிறது.
லோக்சபா தேர்தலின் போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவேன் என பிரதமர் மோடி உறுதிமொழி கொடுத்தார்.. ஆனால் பருப்பு விலை ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்கிறதே? என கொந்தளிக்கிறார்கள் பீகார்வாசிகளும்..
ஆனால் பாஸ்வானோ, பீகாரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பருப்பு விலை குறையும் என்று அடித்துவிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த பஞ்சாயத்துக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் விழிபிதுங்கி கிடக்கிறது பீகார் பா.ஜ.க.
அன்று வெங்காயம்... இன்று பருப்பு
பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரையில் விலை உயர்வால் ஆட்சியை பறிகொடுத்த அனுபவத்தையும் பெற்றிருக்கிறது. 1998ஆம் ஆண்டு டெல்லி பா.ஜ.க. ஆட்சியில் வெங்காயத்தின் விலை ரூ80 ஆக அதிகரித்து ஆட்சியையே பறிகொடுக்கவும் காரணமாக இருந்தது.
இப்போது பீகாரில் ஏதாவது ஒருவகையில் சாதகமாக வீசும் காற்று கூட இந்த பருப்பு விலை பயங்கரத்தால் பறிபோகுமோ என்பதுதான் பா.ஜ.க.வின் பெருங்கவலை.