ஆர்.டி.ஐ சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகளை கொண்டுவர முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு
டெல்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகளை கொண்டுவர கூடாது என்று மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதுதொடர்பாக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட ஆறு கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் அனைத்தையும் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி, ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு (Association for Democratic Reforms) என்ற என்.ஜி.ஓ சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கில், மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடினார். அவர் கூறுகையில், "அரசியல் கட்சிகளுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின்மூலம், மக்களுக்கு வர வேண்டிய நிதி தியாகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அரசியல் கட்சிகள், மக்களிடம் வெளிப்படையாக இருக்க வேண்டியது கட்டாயம். ஆர்.டி.ஐ சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகளை கொண்டுவர கேட்கும் உரிமை மக்களுக்கு உள்ளது" என்று வாதிட்டார்.
மத்திய அரசின் சார்பில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வாதத்தின்போது, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று மத்திய அரசு கூறியது. போட்டி கட்சிகள் பிற கட்சிகளின் விவரங்களை ஆர்.டி.ஐ மூலம் அறிந்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும், இதனால், கட்சிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.