இந்தியாவில் அதிகரிக்கும் 'போர்னோ' குற்ற வழக்குகள்: தப்பும் குற்றவாளிகள்
டெல்லி: இணையதளங்களில் ஆபாச வீடியோ மற்றும் ஆபாச படங்களை வெளியிடுவது, குழந்தைகளை வைத்து படமாக்கப்படும் பாலியல் வக்கிர காட்சிகளைப் பரப்புவது போன்ற போர்னோகிராபி சார்ந்த குற்ற வழக்குகள் கடந்த 2012-13 காலகட்டத்தில் மட்டும் 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப் பதிவுகள் அமைப்பின் புள்ளியல் விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக எம்.பி. வருண் காந்தி லோக்சபாவில் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளது.
போர்னோகிராபி குற்றவழக்குகள் ஆந்திராவில்தான் அதிகம் பதிவாகியுள்ளன. அதேசமயம் இதுபோன்ற போர்னோ குற்றங்கள் தமிழகத்தில் அதிகம் பதிவாகவில்லை என்பது தெரியவந்துள்ளது.
100 சதவிகிதம் அதிகரிப்பு
2012-ல் போர்னோகிராபி குற்ற வழக்குகள் 589 பதிவாகியுள்ளன ஆனால் கடந்த ஆண்டு இவற்றின் எண்ணிக்கை 1,203 ஆக அதிகரித்துள்ளது என்கிறது அந்தப் புள்ளி விபரம்.
ஆந்திரா நம்பர் 1
அதிகபட்சமாக ஆந்திர மாநிலத்தில்தான் 234 வழக்குகள் பதிவாகியுள்ளன. இரண்டாவது இடத்தில் கேரளா இருக்கிறது. இங்கு 177 வழக்குகள் பதிவாகியுள்ளன.
உத்தரபிரதேசம் - ராஜஸ்தான்
உத்தரப் பிரதேசத்தில் 159 வழக்குகள் பதிவாகியுள்ளன. உ.பி.யில் 2012-ல் மட்டும் 26 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. ராஜஸ்தானில் பதிவான வழக்குகள் 81. இது கடந்த 2012-ல் 48 ஆக இருந்தது.
அசாமில் வழக்கு
2012-ல் அசாம் மாநிலத்தில் ஒரு வழக்கு கூட பதிவாகாத நிலையில் 2013-ல் 111 புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த புள்ளவிபரங்கள் அனைத்தையும், பாஜக எம்.பி. வருண் காந்தி மக்களவையில் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளது.
அதிகரிக்கும் குற்றங்கள்
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 67, 67 ஏ, 67 பி-ன் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்களின் எண்ணிக்கை 60% மேல் அதிகரித்திருக்கின்றன எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
737 பேர் கைது
இத்தகைய வழக்குகளின் அடிப்படையில் கைதான 737 பேரில், 167 பேர் உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், 130 பேர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்களாவர்.
தமிழகத்தில் குற்றங்கள்
தமிழகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் போர்னோகிராபி சார்ந்த வழக்குகள் பதிவாவது இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
வக்கிர குற்றங்கள்
2007-ல் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யக்கூடிய குற்றங்கள் குறித்த புள்ளிவிபரங்கள் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது.
குழந்தைகளை அடித்து துன்புறுத்தி தண்டனை வழங்குவது, குழந்தைகளை ஆபாச படங்களில் பயன்படுத்துவது போன்ற குற்றங்களை தேசிய குற்றப் பதிவுகள் அமைப்பின் புள்ளி விபரத்தில் இடம்பெறவில்லை. ஏனெனில் இவை இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய கூடிய குற்றங்களாக இவை அங்கீகரிக்கப்படவில்லை என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.
தொழில்நுட்பக் குறைபாடு
தற்போது பாலியல் குற்றங்களில் தொழில்நுட்ப பயன்பாடு அவற்றின் தன்மையை மாற்றிவிட்டன. அதற்கேற்ப காவல்துறையும், தொழில்நுட்பத்தை விசாரணையில் பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.