பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிட 'பிங்க் ஜட்டி' முத்தலிக் திட்டம்!
ஹூப்ளி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீ ராம சேனே அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் தெற்கு பெங்களூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் அனந்த் குமாரை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளார்.
இந்தத் தொகுதியில் தான் பெங்களூரின் மடிவாளா, பொம்மனஹள்ளி, எலெக்ட்ரானிக் சிட்டி, ஜெயநகர் உள்ளிட்ட பகுதிகள் வருகின்றன.
கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீ ராம சேனே அமைப்பை நடத்தி வரும் பிரமோத் முத்தலிக் பாஜகவில் சேர்ந்தார். சேர்ந்த வேகத்தில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மத வெறியரான முத்தலிக்கை பாஜகவில் சேர்த்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தான் பாஜக இந்த அதிரடி முடிவை எடுத்தது.
இந்நிலையில் முத்தலிக் வரும் லோக்சபா தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
அவமானம்
கட்சியில் சேர்த்த சில மணி நேரத்தில் என்னை நீக்கிய பாஜக என்னை அவமதித்துவிட்டது. இதனால் எனது ஆதரவாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். என்னை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து பாஜக எதுவும் தெரிவிக்கவில்லை.
தேர்தல்
இந்துத்துவத்தை மேம்படுத்தவும், இந்துக்களை காப்பாற்றவும் நான் தார்வாட் தொகுதியில் போட்டியிடலாம் என்று இருக்கிறேன். அதே சமயம் தெற்கு பெங்களூரில் தொகுதியில் பாஜக வேட்பாளர் அனந்த் குமாரை எதிர்த்து போட்டியிடும் எண்ணமும் உள்ளது என்றார்.
ஊழல்
பாஜக வேட்பாளர் அனந்த் குமார் ஒரு ஊழல்வாதி. அவர் கர்நாடகாவில் பாஜகவை அழித்து வருகிறார் என்று கடுமையாக விமர்சித்தவர் முத்தலிக்.
அனந்த் குமார் ஏன்?
பாஜகவில் சேர்ந்த வேகத்தில் தான் வெளியேற்றப்பட்டதற்கு அனந்த் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தான் காரணம் என்று நினைக்கிறார் முத்தலிக். இதனால் அவரை எதிர்த்து போட்டியிடுவதுடன், அவர் செய்த ஊழல்களை விரைவில் ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்போவதாகவும் முத்தலிக் தெரிவித்துள்ளார்.
ராஜ்நாத் சிங்
மங்களூரில் உள்ள பப்புக்குள் புகுந்து அங்கிருந்த வாலிபர்கள் மற்றும் இளம்பெண்களை ஸ்ரீராம சேனே ஆட்கள் தாக்கியதை வைத்து மட்டுமே தனக்கு எதிராக பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் நடவடிக்கை எடுத்துள்ளதாக முத்தலிக் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ராஜ்நாத் சிங் பப் கலாச்சாரத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முஸ்லிம் வாக்குகள்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு தகுதி வழங்குவது ஆகியவற்றில் பாஜக இந்துக்களை ஏமாற்றிவிட்டது. பாஜக தற்போது முஸ்லீம்களின் வாக்குகளை பெற நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டிருக்கிறது என்றார் முத்தலிக்.
பாஜக
நான் இனி பாஜகவுக்கு திரும்பிச் செல்லும் எண்ணமே இல்லை. இனி பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை என்று கறாராக தெரிவித்துள்ளார் முத்தலிக். தனக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் மோடி தலையிட்டிருக்க வேண்டும் என்றார் அவர். இவ்வளவு கூறும் முத்தலிக் மீது 45 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நந்தன் நிலேகனி
தெற்கு பெங்களூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நந்தன் நிலேகனி தனது தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இன்போசிஸ் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான நிலேகனி தான் ஒரு கோடீஸ்வரராக இருக்கின்றபோதிலும் அவர் சேரி பகுதிகளுக்கும் நேரில் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். மக்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.