மும்பை மின் ரயில்களில் பயமில்லாமல் பயணிக்க - விதவிதமான ஐடியாக்களுடன் களமிறங்கும் ரயில்வே!
மும்பை: மும்பையில் மின்சார ரயில்களின் வாசற்படியில் பயணிகள் தொங்குவதை தடுக்க மத்திய ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மும்பையில் மின்சார ரயில்களில் இருந்து தவறி விழுந்து பயணிகள் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து, அதை தடுப்பதற்கான நடவடிக்கையில் மத்திய ரயில்வே தீவிரம் காட்ட தொடங்கி உள்ளது.
இதன் முதற்கட்டமாக மின்சார ரயில்களில் கூட்ட நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் இருக்கைகளை மாற்றி அமைக்க முடிவு செய்தது.
சீட் குறைப்பு:
இதற்காக மின்சார ரயில் பெட்டிகளில் நின்று கொண்டு பயணிப்பதற்கு அதிக இடவசதி ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் சோதனை அடிப்படையில் ஒரு மின்சார ரயிலின் இருக்கைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
வாசற்படிக்கு மேல் மழை நீர் வடிகால்:
இந்த நிலையில், பயணிகள் தவறி விழுவதை தடுப்பதற்காக மேலும் ஒரு நடவடிக்கையாக மத்திய ரயில்வே ரயில் பெட்டியின் வெளியே வாசற்படிக்கு மேல் மழை வடிவதற்காக பொருத்தப்பட்டுள்ள இரும்பு பட்டியை பயணிகள் பிடிக்க முடியாத அளவிற்கு வெட்டி அகற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தொங்கக் கூடாது:
கூட்ட நெரிசலான நேரங்களில் எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் மேலே உள்ள இந்த இரும்பு பட்டியை பிடித்து கொண்டு ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறார்கள். பயணிகள் தவறி விழுந்து இறப்பதற்கு இது தான் முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.
பட்டிகளை வெட்டுங்கள்:
இதன்காரணமாக மத்திய ரயில்வே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மாதுங்கா பணிமனையில் ஒரு மின்சார ரயிலின் பெட்டிகளில் உள்ள இரும்பு பட்டிகளை வெட்டி அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
மற்ற ரயில்களிலும்:
இதேபோல மற்ற ரயில்களிலும் இந்த மாற்றம் செய்யப்படும் என்று மத்திய ரயில்வே தலைமை செய்தி தொடர்பு அதிகாரி நரேந்திர பாட்டீல் தெரிவித்துள்ளார்.