"ரா' தலைவராக ராஜிந்தர் கன்னா நியமனம்!
டெல்லி: இந்தியாவின் வெளிநாட்டு உளவு மற்றும் கொள்கை வகுப்பு அமைப்பான 'ரா'வின் புதிய தலைவராக ராஜிந்தர் கன்னாவை மத்தியஅரசு நியமித்துள்ளது.
"ரா' தலைவராக இருக்கும் அலோக் ஜோஷி, வரும் 31-ந் தேதியுடன் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து அப்பதவிக்கு ராஜிந்தர் கன்னா நியமிக்கப்பட்டுள்ளார். ராஜிந்தர் கன்னா 1978ஆம் ஆண்டு ஒடிஷா கேடரைச் சேர்ந்தவர்.
உள்நாட்டுக்குள்ளும் வெளிநாட்டில் இருந்தும் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக இந்தியா போராடி வரும் நிலையில் ராஜிந்தர் கன்னா 'ரா' தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் வல்லுநரான ராஜிந்தர் கன்னா, நாட்டின் பாதுகாப்பு பிரச்சனைகளை எதிர்கொள்வதில் மிகவும் முக்கியப் பங்காற்றுவார்.
அத்துடன் 'ரா' அமைப்பில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டிய நெருக்கடியும் ராஜிந்தர் கன்னாவுக்கு இருக்கிறது. அண்மையில் ஐபி அமைப்பின் தலைவராக தினேஷ்வர் சர்மா நியமிக்கப்பட்ட போதும் இத்தகைய ஒரு நெருக்கடியை அவர் எதிர்கொண்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.