ரூபாய் நோட்டு தடைக்கான காரணத்தை தெரிவிக்க ஆர்பிஐ மறுப்பு
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை தெரிவிக்க முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
டெல்லி: மத்திய அரசின் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டு ரத்து செய்ததற்க்கான காரணம் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ரிசர்வ் வங்கி இதற்கு பதிலளிக்க மறுத்து விட்டது.
கருப்பு பணத்தை ஒழி்க்கும் நடவடிக்கையாக மத்திய அரசு கடந்த நவம்பர் 8ம் தேதி, அதிரடியாக ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இந்நிலையில் சமூக ஆர்வலரான வெங்கடேஷ் நாயக், ஆர்டிஐ சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கிக்கு ஒரு மனு அனுப்பினார். அதில், ஏன் மத்திய அரசு ரூபாய் நோட்டுகளை ரத்து செய்தது என்று கேள்வி கேட்டுள்ளார்.
இதற்கு ஆர்பிஐ அளித்த பதிலில், "ஆர்டிஐ சட்டத்தின் பிரிவு 8(1)(ஏ)-ன் கீழ் (நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாட்டை பாதிக்கும் தகவலை தெரிவிக்க தேவையில்லை) பண மதிப்பு நீக்கத்துக்கான காரணத்தை தெரிவிக்க இயலாது.
மேலும் பணத் தட்டுப்பாடு எப்போது தீரும் என்பது பற்றியும் தகவல் தர இயலாது. ஏனெனில், ஆர்டிஐ சட்டப் பிரிவு 2(எப்)-ன்படி எதிர்கால நிகழ்வுகளை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறப்பட்டுள்ளது. அதேபோல், மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்புக்கு ஈடான, புதிய ரூபாய் நோட்டுகள் எப்போது புழக்கத்துக்கு வரும் என்ற கேள்விக்கும் பதிலளிக்க ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது