ஏடிஎம்மில் பிப்.1 முதல் பணம் எடுக்க கட்டுப்பாடு கிடையாது.. "கரண்ட் அக்கவுண்ட்"டுக்கு மட்டும்!
டெல்லி: கரண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் பணம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடையை ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளது. பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அவர்கள் எந்த உச்ச வரம்பும் இன்றி அவர்கள் பணம் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் இனி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதையடுத்து பழைய நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து வங்கிகளில் பணத்தை டெப்பாசிட் செய்யவும் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஒருநாளைக்கு குறிப்பிட்ட தொகை வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கரண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளது. பணமதிப்பு ரத்து நடவடிக்கைக்குப் பின் விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும் ஆர்பிஐ அறிவித்துள்ளது. கரண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு நவம்பர் 8ஆம் தேதிக்கு முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட விதிகளையே வங்கிகள் கடைபிடிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் எந்த மாற்றமும் இன்றி நீடிக்கும் என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது. பட்ஜட் கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் கரண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications