ஜிஎஸ்டி 5% ஆக குறைத்தும் ஹோட்டல் பில் குறையலையா? உடன் புகார் பண்ணுங்க!
ஹோட்டல்களில் பில்லை போட்டு தீட்டினால் மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியத்துக்கு 1800 1200 232 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம்.
டெல்லி: ஜிஎஸ்டி 5 சதவிகிதமாக குறைத்த பிறகும் ஹோட்டல்களில் அதிக தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்ட ஹோட்டல்கள் மீது மக்கள் புகார் தெரிவிக்கலாம் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. ஹோட்டல்களுக்கு 18 சதவிகிதமாக இருந்த ஜிஎஸ்டி அனைத்து ஹோட்டல்களுக்கும் ஒரே விகிதமாக 5% குறைக்கப்பட்டது.
178 பொருட்கள் 28 சதவீத வரி வரம்பில் இருந்து 18 சதவீதம் மற்றும் அதற்கு கீழான வரி விகிதத்துக்கு மாற்றப்பட்டன. ஆனால் பொருட்களின் விலை குறைந்தபாடில்லை.
ஃபிராடு பண்ணும் ஹோட்டல்கள்
ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்திவிட்டு பழைய பில் தொகையே வரும் வகையில் மாற்றி அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. ஆதாரப்பூர்வமாக பில் தொகையை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
நடவடிக்கை பாயும்
வரி குறைப்பு பலனை ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள், வரி குறைப்பு பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
ஹோட்டல் சங்கங்கள்
வருமான வரித்துறை விலை குறைப்பு விவரங்களை ஆதாரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஹோட்டல் சங்கங்கள் இதை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளது. ஆனால் நடப்பதோ வேறாக உள்ளது. பல ஹோட்டல்களில் உணவுப்பண்டங்களின் விலை உயர்ந்துள்ளது.
இணையதளத்தில் புகார்
ஹோட்டல்கள் அதிகமாக வசூலித்தால் புகார் தெரிவிக்கும் வழிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. சிபிஇசி ஜிஎஸ்டி இணையதளத்துக்கு சென்று (https://cbec-gst.gov.in/) ஜிஎஸ்டி தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம். அல்லது நுகர்வோர் விவகாரத்துறைக்கும் புகார் அனுப்பலாம்.
அதிகாரிகள் விசாரிப்பார்கள்
உங்கள் பெயர், மொபைல் எண், ரெஸ்டாரன்ட் பெயர், ரெஸ்டாரன்ட் அமைந்துள்ள இடம், புகார் விவரம் பதிவு செய்யலாம். பில் அனுப்ப தேவையில்லை. அதேநேரத்தில், சம்பந்தப்பட்ட உணவு பொருளுக்கு வரி குறைப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய பில்லை ஆதாரமாக வைத்திருப்பது அவசியம். அதிகாரிகள் விசாரணைக்கு வரும் போது ஆதாரங்களை கொடுக்க வேண்டும்.
ஆலோசனை பெறலாம்
நுகர்வோர் விவகார துறைக்கும் பெயர், மொபைல் எண், ரெஸ்டாரன்ட் பெயர் உள்ளிட்ட விவரங்களை அனுப்பலாம். நுகர்வோர் நீதிமன்றத்தையும் அணுகலாம். அதேநேரத்தில் துறை மூலமாக தீர்வு காண 1800114000 எண்ணுக்கு அழைத்தால் தீர்வுகாண ஆலோசனை கிடைக்கும்.
ட்விட்டரில் புகார்
மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியத்துக்கு 1800 1200 232 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம். ட்விட்டரில் askGST_Goi மற்றும் நிதியமைச்சகத்தின் (@FinMinIndia ட்விட்டர் முகவரிக்கு புகாரை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழிசை ஆய்வு
பலரும் பில்லுடன் ட்விட்டரில் பதிவிட்டதால் தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஹோட்டலில் சென்று சாப்பிட்டு பார்த்தார். அப்படியும் விலை குறைந்த பாடில்லையே என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.