எங்களை கேட்டா சிவசேனா கூட்டணியை முறித்தீங்க..? பாஜக மீது கடும் அதிருப்தியில் ஆர்.எஸ்.எஸ்
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் சிவசேனாவுடனான கூட்டணியை பாஜக முறித்துக் கொண்டதால் ஆர்.எஸ்.எஸ். அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
288 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு அக்டோபர் 15-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் சிக்கல் எழுந்ததால் 25 ஆண்டுகால பாஜக- சிவசேனா கூட்டணி முறிந்தது.
இந்த நிலையில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான "சாம்னாவின்" முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூட்டணியை முறித்துக் கொண்டதால் பாஜக மீது ஆர்.எஸ்.எஸ். அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அச்செய்தி விவரம்:
செப்டம்பர் 28-ந் தேதியன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை பாஜகவின் மத்திய அமைச்சர் அனந்த குமார், ரவீந்திர பூசாரி ஆகியோர் சந்தித்துள்ளனர். அப்போது மகாராஷ்டிரா தேர்தலுக்கான வியூகம் வகுத்து வழிநடத்துமாறு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை பாஜக தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். இதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், "கூட்டணியை முறிக்கும் போது எங்களிடம் ஆலோசனை கேட்டீர்களா? ஏன் பாரதிய ஜனதா கட்சி இந்துத்துவா கொள்கையில் இருந்து விலகி ஓடுகிறது? உங்களது சுயலாபத்துக்காகத்தான் இந்த கூட்டணியை முறித்தீர்களா? இதன் மூலம் இந்துக்களை பிளவுபடுத்திவிட்டீர்களே?" என்று கொந்தளித்துள்ளனர்.,
அத்துடன் "உங்களுக்கு முதல்வர் நாற்காலிதானே முக்கியம்.. சிவசேனா என்ன நிதிஷ்குமார் கட்சியா? சிவசேனா கட்சி நம்முடைய உண்மையான நண்பர்கள் இல்லையா? ஏற்கெனவே தேசியவாத காங்கிரஸ், மராத்தா சமூகத்தை தம் வசம் வைத்து இந்துக்களை பிளவுபடுத்தி வைத்திருக்கிறது என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாறு சாம்னாவில் எழுதப்பட்டுள்ளது.