ரூ 10,000 கோடி டெபாசிட் செய்தால் சகாரா தலைவருக்கு ஜாமீன்: உச்சநீதிமன்றம் நிபந்தனை
டெல்லி: ரூ.10 ஆயிரம் கோடி டெபாசிட் செய்தால் சகாரா நிறுவனத் தலைவர் சுப்ரதா ராய்க்கு ஜாமீன் வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சகாரா குரூப் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. இது தொடர்பாக சகாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரதா ராய் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சுப்ரதா ராயை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஜெ.எஸ்.கெஹர் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
அதன் முடிவில், ‘ரூ.10 ஆயிரம் கோடி டெபாசிட் செய்தால் ராய்க்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படும்' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த தொகையை கொடுத்திட நிறுவனத்தின் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் விடப்பட்ட கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘எந்த, எந்த வங்கிகளில் எவ்வளவு தொகை இருக்கிறது உள்ளிட்ட விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்' எனத் தெரிவித்துள்ளனர்.