வருகிறார் ஒபாமா... பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க அமெரிக்க அதிகாரிகள் இந்தியா வருகை
டெல்லி: இந்திய குடியரசு தின விழாவுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வருவதை முன்னிட்டு, இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் டெல்லி வரவுள்ளனர். ஒபாமாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர்கள் இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
நாட்டின் 66வது குடியரசு தினம் வருகிற 26ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கலந்துகொள்ளவுள்ளார்.
இதனால் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். ஒபாமாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க அவரது பாதுகாப்புப் படை அதிகாரிகள் 12ம் தேதி இந்தியா வருகின்றனர்.
ஓபாமாவுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு, டெல்லி போலீஸ், சி.ஐ.எஸ்.எப்., உளவுத்துறை, விமான போக்குவரத்து அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து தனி பாதுகாப்பு திட்டம் ஒன்றை அமெரிக்க அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர்.
டெல்லியில் ஒபாமா தங்க உள்ள ஐ.டி.சி. மௌரியா செராடன் ஓட்டலை வரும் 20ம் தேதி முதல் அமெரிக்க அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டிக்குள் கொண்டு வரவுள்ளனர். குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக, வரும் 24ம் தேதி ஒபாமா டெல்லி வர திட்டமிட்டுள்ளார். அவர் டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்படும் வரை அந்த ஓட்டல் அமெரிக்க அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும். ஏற்கனவே மூன்று முறை ஐ.டி.சி. மௌரியா செராடன் ஓட்டலில் அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சாலை வசதி, பாதுகாப்பு, உணவு மற்றும் பிற அம்சங்கள் குறித்து அவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
ஒபாமா இந்தியா வரும்போது, அவருக்கு பாதுகாப்பு வழங்கும் முழு பொறுப்பும் அமெரிக்க அதிகாரிகள் வசமே இருக்கும். ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு ஒபாமா இந்தியா வந்த போது செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் போல் இல்லாமல், இம்முறை பலகட்ட பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை திறந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் வரை அமர்ந்து அவர் பார்க்க உள்ளதால் தான் இந்த அளவுக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.