சர்வீஸ் சார்ஜுக்கும், எங்களுக்கும் சம்பந்தமே இல்லை.. அருண் ஜெட்லி
டெல்லி: உணவகங்களில் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் சர்வீஸ் சார்ஜ் ஆனது தனிப்பட்ட முறையிலேயே பெறப்படுவதாகவும், அதற்கும் அரசிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கமளித்துள்ளார்.
சிறியது முதல் பெரியது வரையிலான அனைத்து உணவகங்களிலும் சாப்பாட்டு பில்லில் சர்வீஸ் சார்ஜ் என்ற ஒன்று கட்டாயம் இடம் பிடித்திருக்கும். இது அரசாங்கத்தின் சேவை வரியா அல்லது நமக்கு உணவைப் பரிமாறியதற்கான வரியா என்ற குழப்பம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உண்டு.
தற்போது அதற்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அளித்துள்ள விளக்கத்தில், ‘சில உணவகங்களில் உணவுக்கான கட்டணம் மட்டுமின்றி, சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் ஒரு தொகை வசூலிக்கப் படுகிறது. இது முழுக்க முழுக்க சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு மட்டுமே சொந்தமாகும் தொகை. இதற்கும் அரசிற்கும் எந்தவித தொடர்புமில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், குளிர்சாதன வசதி செய்யப்பட்ட உணவகங்களில் உணவிற்கான தொகையில், 40 சதவீதத்திற்கு மட்டுமே 5.6 சதவீதம் சர்வீஸ் சார்ஜாக வசூலிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, குளிர்சாதன வசதி செய்யப்படாத எந்த உணவகங்களிலும் சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .