தாலி கட்டும் நேரத்தில் ஐஸ்கிரீம் காலி...ஆத்திரத்தில் மாப்பிள்ளை வீட்டார் தகராறு...திருமணமும் நின்றது
அலகாபாத்: உத்தரபிரதேசத்தில் திருமண விருந்தில் ஐஸ்கிரீம் காலியானதால், தகராறில் ஈடுபட்ட மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தையே நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் மகேஷ்நகர் என்ற காலனியில் திருமணம் ஒன்று நடைபெறுவதாக இருந்தது. இருவீட்டுப் பெரியவர்களும் பேசி ஏற்பாடு செய்திருந்த அந்த திருமணத்தில், முகூர்த்த நேரம் நெருங்கியது.
மணமகள் கழுத்தில் மணமகள் தாலி கட்டும் நேரத்தில், திருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் ஐஸ்கிரீம் வழங்கப்பட்டது. அப்போது எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகமாக இருந்ததால், பெண் வீட்டாரால் மாப்பிள்ளை வீட்டார் அனைவருக்கும் ஐஸ்கிரீம் வழங்க இயலவில்லை.
இதனால், மாப்பிள்ளை வீட்டார் ஆத்திரம் அடைந்தனர். இது தொடர்பாக மாப்பிள்ளை வீட்டாருக்கும், பெண் வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வாக்குவாதம் கைகலப்பானது. இதில் திருமணத்திற்கு வந்த பலரும் காயம் அடைந்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் இரு வீட்டாரிடமும் சமாதானத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வீட்டார், அவர்களைக் கல்வீசித் தாக்கத் தொடங்கினர். இதில் ஒரு காவலர் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர் காயம் அடைந்தனர்.
இதனால், மேலும் போலீசார் வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடத்திய பெண் வீட்டார் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வன்முறையால் நடைபெற இருந்த திருமணம் நின்று போனது.
இந்த சம்பவம் தொடர்பாக இரு வீட்டார் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.