ஆடிட்டர் ரமேஷ் கொலை: சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு– சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி
டெல்லி: சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த ஜூலை 19-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை தமிழக சிபிசிஐடி போலீஸ் விசாரித்து வருகிறது. இந் நிலையில், ரமேஷின் நண்பர் மனோகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மனு தாக்கல் செய்தார். அதில் "ரமேஷ் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழகத்தில் பாஜக மற்றும் இந்து மதம் சார்ந்த தலைவர்களைக் குறிவைத்து படுகொலைகள் நடத்தப்படுகின்றன. அவர்களுக்குள்ள அச்சுறுத்தலை அறிந்த பிறகும் தமிழக அரசு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை. அதனால்தான் ரமேஷ் உயிரிழக்க நேர்ந்தது. எனவே, இவ் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்' என்று மனோகரன் கோரியிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம் இந்த மனுவை விசாரித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த அக்டோபரில் மனோகரன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதற்கிடையே, ரமேஷ் கொலை தொடர்பாக "போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக் உள்ளிட்டோரை தமிழக சிபிசிஐடி போலீஸ் கைது செய்தது.
இத் தகவலை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த மாதம் குறிப்பிட்டு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. இது தொடர்பான மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகோய் அடங்கிய அமர்வு பிறப்பித்த செவ்வாய்கிழமையன்று பிறப்பித்த உத்தரவு:
"ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடையதாக சிலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகக் குற்றப்புலனாய்வு காவல் துறை இவ் வழக்கை விசாரித்து வருகிறது.
இச் சூழலில் இவ் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. அதனால்தான் இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கின் விசாரணை முழுமையாக முடிவடையும்போது, அதில் மனுதாரருக்குத் திருப்தி ஏற்படாவிட்டால், சம்பந்தப்பட்ட அமைப்பை (சென்னை உயர் நீதிமன்றம்) அவர் மீண்டும் அணுகி நிவாரணம் பெறலாம். எனவே, தற்போதைய நிலையில், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடி செய்கிறோம்' என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டனர்.












Click it and Unblock the Notifications