வரி குறைப்பு: எல்சிடி, எல்இடி, கலர் டி.வி., பிரிட்ஜ், கம்ப்யூட்டர், சோப்பு விலைகள் குறையும்
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் வரி குறைக்கப்பட்டுள்ளதால் இனி டிவி, பிரிட்ஜ் ஆகியவற்றின் விலை குறையும்.
2014-2015ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் பெண் கல்வி, பாதுகாப்பு, விவசாயம், நதிகள் இணைபப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிகரெட், புகையிலை பொருட்கள் மீதான உற்பத்தி வரியை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உயர்த்தியுள்ளார். அதே சமயம் டிவி, பிரிட்ஜ் ஆகியவற்றின் மீதான உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது. அதனால் அவற்றின் விலையும் குறையும்.
டிவிக்களில் பயன்படுத்தப்படும் பிக்சர் டியூப்கள் மீதான உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளதால் டிவி விலை குறையும். மேலும் நாட்டில் எல்.சி.டி., எல்.இ.டி. டிவிக்களை அதிக அளவில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜேட்லி அறிவித்துள்ளார்.
இதே போன்று கம்ப்யூட்டர்களின் விலையும் குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், காலணிகள், சோப்பு, அச்சு ஊடக விளம்பரங்களுக்கான கட்டணம் ஆகியவற்றின் விலைகளும் குறையும்.
19 இன்சுக்கு குறைவான எல்.இ.டி., எல்.சி.டி. டிவிக்கள் மீதான சுங்க வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவையும் விலை குறையும்.