சுனந்தா இறப்பதற்கு முன்பு ஹோட்டல் அறையில் கைகலப்பு நடந்துள்ளது
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தாவுக்கு தெரிந்த யாரோ தான் அவருக்கு விஷம் கொடுத்திருக்க வேண்டும் என்று இந்த வழக்கை விசாரித்து வரும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் உடற்கூறுகள் லண்டனில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு எந்த வகையான விஷம் கொடுக்கப்பட்டது என்பதை கண்டறியவே உடற்கூறுகள் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சுனந்தா விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். கடந்த மாதம் அளிக்கப்பட்ட மருத்துவர்கள் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தான் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கைகலப்பு
சுனந்தா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லி லீலா பேலஸ் ஹோட்டலில் பிணமாகக் கிடந்தார். அவர் இறப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு அவர் தங்கியிருந்த அறையில் மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது கண்ணாடி உடைந்து, பொருட்கள் அறையில் வீசப்பட்டதாகவும் மருத்துவர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெளிவு
சுனந்தாவின் கொலை திட்டமிட்டு தெளிவாக செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததுள்ளனர். ஆனால் அவருக்கு விஷம் வாய் வழியாகவா அல்லது ஊசி மூலமாக அளிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.
தெரிந்த யாரோ
சுனந்தாவின் ஹோட்டல் அறைக்கதவை உடைத்துக் கொண்டு யாரும் செல்லவில்லை. அப்படி என்றால் அவருக்கு தெரிந்த யாரோ தான் அவருக்கு விஷம் கொடுத்திருக்க வேண்டும என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விசாரணை
லீலா பேலஸ் ஹோட்டலில் கடந்த ஆண்டு ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் தங்கியிருந்த அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
ஆல்பிராக்ஸ்
ஜனவரி 16 மற்றும் 17ம் தேதி வாக்கில் சுனந்தா தூங்குவதற்காக ஆல்பிராக்ஸ் மருந்து எடுத்துக் கொண்டதாக தரூர் கடந்த ஆண்டு டெல்லி போலீஸ் மற்றும் மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்தார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் சுனந்தாவின் உடலில் ஆல்பிராக்ஸ் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.