யுவராஜை ஜாமீனில் வெளியே விடாதீங்க... விசாரணையை 18 மாதத்தில் முடிங்க- சுப்ரீம் கோர்ட்
கோகுல்ராஜ் கொலை வழக்கை 18 மாதங்களில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் யுவராஜை எந்த நீதிமன்றமும் ஜாமீனில் விடுவிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
டெல்லி: கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செயயப்பட்டுள்ள யுவராஜை எந்த நீதிமன்றமும் ஜாமீனில் வெளியே விடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கை கீழமை நீதிமன்றங்கள் 18 மாதங்களில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான தலித் இளைஞர் கோகுல் ராஜ், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதியன்று, திருச்செங்கோடு அருகே சடலமாக மீட்கப்பட்டார். வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததால், தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான தீரன் சின்னமலை அமைப்பின் தலைவர் யுவராஜ் தலைமறைவானார். இதற்கிடையில், கோகுல்ராஜ் கொலைவழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது, யுவராஜ் வெளியிட்ட வாட்ஸ் அப் ஆடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியது.இதையடுத்து, யுவராஜை தேடும் பணியை காவல்துறை தீவிரப்படுத்தியது. இந்நிலையில், 2015ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 11ஆம் தேதி யுவராஜ் சரணடைந்தார். அதன்பின்னர், கொலைவழக்கு பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட யுவராஜை ஜாமீனில் விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஜாமீனில் வெளியேவந்த யுவராஜ், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கு குறித்தும், திமுக தலைவர் கருணாநிதி, தொல். திருமாவளவன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோருக்கு கொலை மிரட்டல் விடும்வகையில் பேசிய வாட்ஸ் அப் ஆடியோ தமிழகம் முழுவதும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கொலை மிரட்டல் விடுத்த யுவராஜை கைதுசெய்ய வேண்டும் என்று சுப.வீரபாண்டியன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவும் அளித்திருந்தார்.
இந்நிலையில், யுவராஜின் ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், யுவராஜுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மே 26ஆம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அதில், எந்த அடிப்படையில் யுவராஜ் ஜாமீனில் விடுவிக்க அனுமதிக்கப்பட்டார் என்பதை உயர்நீதிமன்றம் குறிப்பிடவில்லை. எனவே, யுவராஜை ஜாமீனில் விடுவித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் யுவராஜின் ஜாமீனை ரத்து செய்தது. இதையடுத்து, யுவராஜை சிபிசிஐடி போலீசார் சென்னையில் மீண்டும் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஜாமீன் ரத்தை எதிர்த்து யுவராஜ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். அதில் யுவராஜ்க்கு எந்த நீதிமன்றமும் ஜாமீன் வழங்கக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், கோகுல்ராஜ் கொலை வழக்கை 18 மாதங்களில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.