மும்பை பேங்க் ஆப் பரோடா வங்கியில் 25 அடிக்கு குழி தோண்டி லாக்கரை உடைத்த கொள்ளையர்கள்
மும்பையில் இருக்கும் பேங்க் ஆப் பரோடாவில் நேற்று கொள்ளையர்கள் நூதனமான முறையில் கொள்ளையடித்து இருக்கின்றனர்.
Recommended Video
மும்பை: மும்பையில் இருக்கும் பேங்க் ஆப் பரோடாவில் நேற்று கொள்ளையர்கள் நூதனமான முறையில் கொள்ளையடித்து இருக்கின்றனர். நான்கில் இருந்து ஐந்து பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சினிமாவில் நடப்பதை போலவே சுரங்க பாதை தோண்டி இந்த கொள்ளை நடந்து இருக்கிறது. மேலும் இதற்கு பெரிய அளவில் திட்டம் தீட்டப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது. போலீசார் இது குறித்து தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
பேங்க் ஆப் பரோடாவில் கொள்ளை
நவி மும்பையில் இருக்கும் 'ஜூனி நகர்' பேங்க் ஆப் பரோடா கிளையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு பெரிய அளவில் கொள்ளை நடந்து இருக்கிறது. திங்கள் கிழமை காலை வந்து பிறகே கொள்ளை நடந்த விஷயம் பணியாளர்களுக்கு தெரிந்தது. வங்கியில் லாக்கர் இருக்கும் தரை பகுதி சுரங்கம் போல தோண்டப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 30க்கும் அதிகமா லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது.
கொள்ளை நடந்தது எப்படி
இந்த கொள்ளை சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக் கிழமை இரவு என இரண்டு நாட்கள் நடந்து இருக்கிறது. சிறிய ரக மண்வெட்டியால் 25 ஆடி ஆழத்திற்கு பொறுமையாக பள்ளம் தோண்டப்பட்டு இருக்கிறது. இந்த சுரங்க பாதை இரண்டு நபர்கள் செல்லும் அளவுக்கு அகலமாக இருந்துள்ளது. மேலும் பக்கத்து கடையை இணைக்கும் வகையில் இந்த சுரங்கம் தோண்டப்பட்டு உள்ளது. இதன் வழியாக கொள்ளையர்கள் உடைத்த அனைத்து லாக்கர்களையும் தூக்கி சென்று இருக்கின்றனர்.
மாஸ்டர் பிளான்
இந்த திட்டத்திற்காக கொள்ளையர்கள் வங்கிக்கு பக்கத்து கடையை கடந்த மே மாதமே வாடகைக்கு எடுத்து இருக்கிறார்கள். இதற்காக கடந்த ஐந்து மாதமா திட்டமிட்டுள்ளனர். மேலும் சிசிடிவி கேமராவில் பதிவாகாத படி அனைத்து வேலைகளையும் செய்துள்ளனர். மேலும் அந்த வங்கிக்கு தினமும் சென்று அங்கு இருக்கும் இடங்களையும், இரவில் செக்யூரிட்டி தூங்கும் நேரத்தையும் கண்டுபிடித்து இருக்கின்றனர்.
விசாரணை ஆரம்பித்தது
தற்போது பக்கத்து கடையை வாடகைக்கு விட்ட நபர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த கொள்ளையில் நான்கில் இருந்து ஐந்து நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம். இதில் மொத்தம் 40 லட்சம் மதிப்பிலான நகைகளும், வைரங்களும் கொள்ளை போய் உள்ளது. 225 லாக்கரில் முப்பது மட்டுமே கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது.