திருப்பதியில் கடத்தப்பட்ட சிறுமி பெங்களூருவில் மீட்பு: பெண் கைது- வீடியோ
திருப்பதி: திருப்பதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட சிறுமி நந்தினியை பெங்களூருவில் தனிப்படை போலீசார் மீட்டனர். சிறுமியை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திருமலை யாத்ராசதன் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் ஸ்ரீகாளஹஸ்தி மண்டலம் அம்மபாளையம் கிராமத்தை சேர்ந்த பண்டிசுரேஷ் என்பவர் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி தாட்சாயிணி. மகள் நந்தினி,6.
கடந்த 25ஆம்தேதியன்று கடை எதிரே விளையாடிக்கொண்டிருந்த நந்தினி மாயமானார். இது குறித்து திருமலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
யாத்ராசதன் 4 பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது ஒரு பெண் அந்த பகுதியில் குடிநீர் பிடிக்கும் இடத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி நந்தினியை கடத்திச்செல்வது தெரிய வந்தது.
திருப்பதி புறநகர் போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் மொகந்தி உத்தரவின் பேரில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் பல்வேறு ஊர்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கடத்தப்பட்ட நந்தினி பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து பெங்களூரு சென்ற தனிப்படை போலீசார் சிறுமி இருந்த இடமான சுப்பிரமணி லேஅவுட் பகுதிக்கு சென்றனர். அங்கு விசாரணை நடத்தியதில் அதே பகுதியில் வசிக்கும் நாராயணா என்பவர் மனைவி ஷாலினி,34 என்ற பெண் சிறுமி நந்தினியை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து நந்தினியை மீட்ட தனிப்படை போலீசார், அவளை கடத்திய ஷாலினியை கைது செய்து திருப்பதிக்கு கொண்டு வந்து போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் மொகந்தி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் பண்டிசுரேஷ்- தாட்சாயிணி அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் நந்தினியை போலீசார் ஒப்படைத்தனர். அப்போது குழந்தையை கட்டி அணைத்து உச்சி முகர்ந்தனர்.