கப்பர் சிங், மல்கான் சிங், பூலான் தேவி.. சம்பல் பள்ளத்தாக்கு வாக்காளர் பட்டியலில் 2000 கொள்ளையர்கள்
போபால்: கொள்ளையர்கள், கொலைகாரர்கள் என சட்டம் சொன்னாலும், சிலரை இன்னமும் தெய்வமாக, தலைவர்களாக பாவிக்கும் மக்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் என்பதற்கு மத்தியப்பிரதேச மாநிலம் சம்பல் பள்ளத்தாக்கு ஒரு சாட்சியாகும்.
அங்குள்ள வாக்காளர் பட்டியலில் சட்டத்தால் குற்றவாளிகளாக குறிப்பிடப்படும் பெயரில் மட்டும் சுமார் இரண்டாயிரம் பேர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1950-70ம் ஆண்டுகளில் மத்திய பிரதேச மாநிலம் சம்பல் பள்ளத்தாக்கில் பூலான் தேவியைப் போன்றவர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். கொலை கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த அவர்களை சம்பல்காட்டு கொள்ளைக்காரர்கள் என மக்கள் அழைத்தனர்.
பல்வேறு சம்பவங்களால் அவர்கள் எல்லாம் அழிந்து விட இன்னமும் அவர்களது பெயர்களை தங்களது பிள்ளைகளுக்குச் சூட்டி வருகின்றனராம் அப்பகுதி மக்கள்.
சம்பல் கொள்ளையர்கள்....
குதிரையில் துப்பாக்கியுடன் வந்து கிராமங்களை சூறையாடுவது, வனவிலங்குகளை வேட்டையாடி கடத்துவது, காட்டில் பதுங்கி வாழ்வது என நாடு முழுவதும் சம்பல் கொள்ளையர்கள் பற்றிய பீதி கிளப்பும் கதைகள் சொல்லப் பட்டு வருகின்றன.
பூலான் தேவி....
இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பூலான்தெவி, மல்கான் சிங், கப்பர் சிங், தாகாய்ட் மன்சிங், தாத்வூ ஆகியோர் ஆவர்.
தெய்வமாகக் கொண்டாடும் மக்கள்...
இவர்கள் கொள்ளை, கொலையில் ஈடுபட்டாலும், சம்பல் கொள்ளையர்கள் தங்கள் சாதி, மதத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு நன்மைகளையும் செய்துள்ளனர் என்பது இன்றும் அவர்களை தெய்வமாக மதிக்கும் மக்களால் அறிந்து கொள்ள முடிகிறது.
233 பூலான் தேவிகள்...
இதனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது சமீபத்தில் வெளியான வாக்காளர் பட்டியல். அதன்படி, சம்பல் பகுதி வாக்காளர் பட்டியலில் 904 கப்பர் சிங்குகளும், 578 மல்கான் சிங்குகளும், 233 பூலான் தேவிகளும், 218 தாத்வூக்களும் இருப்பது தெரியவந்துள்ளது.