மேனகா காந்தியின் பாதுகாவலர் கார் மோதி பெண் படுகாயம்.. கோமாவில் உயிர் ஊசல்
பிலிபித்: உபியில் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் பாதுகாவலரின் கார் மோதி பெண் ஒருவர் கோமா நிலைக்குச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள பிலிபித் தொகுதியில் நேற்று சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி தலைமையில் நடைபெற்றன.
அதற்கு முன்னதாக நேற்று முன்தினம் இரவு மேனகா காந்தி பிலிபித்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவரது வாகனத்திற்கு முன்பும் பின்பும் போலீசாரின் பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. பிலிபித் அருகே பன்கதி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது சுமார் 7.30 மணி அளவில் அவ்வழியாக சென்ற பைக் ஒன்றின் மீது மேனகாவின் செக்யூரிட்டி வாகனம் மோதியது.
பைக்கில் இருந்த பாபுராம் என்ற இளைஞர் மற்றும் அவரது தாயார் மங்கோ தேவி தூக்கி வீசப்பட்டனர். பாபுராம் லேசான காயங்களுடன் தப்பினர். பலத்த காயமடைந்த மங்கோ தேவி பிலிபித்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் கோமா நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது சகோதரர் மூலமாக போலீசில் புகார் அளித்துள்ளதாக பாபு ராம் தெரிவித்துள்ளார்.
மேனகாவை பின் தொடர்ந்து வந்த இரண்டாவது பாதுகாப்பு வாகனம் தன் மீது மோதியதாக அதில் பாபு ராம் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மேனகாவின் செய்தி தொடர்பாளர் ரஞ்சித் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், மேனகாவின் பாதுகாவலர் வாகனம் மோதி விபத்து ஏற்படவில்லை. மாறாக பாபுராம் பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது என்று தெரிவித்துள்ளார்.