இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியப்பட்டாவை விண்ணில் ஏவ முக்கிய பங்காற்றிய யு.ஆர்.ராவ்!
உடல்நலக்குறைவால் காலமான யு.ஆர். ராவ் இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியப்பட்டாவை விண்ணில் ஏவ முக்கிய பங்காற்றியவர் ஆவர்.
பெங்களூரு: உடல்நலக்குறைவால் காலமான யு.ஆர்.ராவ் இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியப்பட்டாவை விண்ணில் ஏவ முக்கிய பங்காற்றியவர் ஆவர். மத்திய அரசின் பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் அடமாரு என்ற கிராமத்தில் 1932 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி உடுப்பி ராமச்சந்திர ராவ் பிறந்தார். உடுப்பி ராமச்சந்திர ராவ், யுஆர்.ராவ் என அழைக்கப்பட்டார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் அறிவியலில் இளங்கலைப் பட்டமும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அகமதாபாத் இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் 1961-ல் முனைவர் பட்டம் பெற்றார். டாக்டர் விக்ரம் சாராபாயின் வழிகாட்டுதலில், காஸ்மிக் கதிர்கள் குறித்து ஆராய்ந்தார்.
டெக்சாஸ் பல்கலைக்கழத்தில் பணி
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் உயர் ஆராய்ச்சி மையத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றினார். காஸ்மிக் கதிர்களில் உள்ள எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள் குறித்து ஆராய்ந்தார்.
ஆர்யப்பட்டாவை செலுத்த..
செயற்கைக்கோள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான பொறுப்பை 1972-ல் ஏற்றார். இவரது வழிகாட்டுதலில், 1975-ல் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா மற்றும் அடுத்தடுத்து பல செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.
இஸ்ரோ தலைவராக..
பெங்களூரு வில் உள்ள இஸ்ரோ நிறுவனத்தின் செயற்கைக்கோள் மைய இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1984 முதல் 1994 வரை இஸ்ரோ தலைவராக இருந்தார்.
கர்நாடக அரசின் விருதுகள்
கர்நாடக அரசின் ராஜ்யோத்சவ் விருது, சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருது, மேகநாத் சாகா பதக்கம், ஜாகிர் உசேன் நினைவு விருது, ஆர்யபட்டா விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றவர்.
பத்ம விருதுகள்
1976-ல் மத்திய அரசின் பத்மபூஷண் விருது பெற்றார். இந்த ஆண்டு அவருக்கு மத்திய அரசு பத்மவிபூஷன் விருதை வழங்கி கவுரவித்துள்ளது.
இன்று காலை மரணம்
இந்நிலையில் இன்று காலை மூன்று மணியளவில் உடல்நலக்குறைவால் அவரது உயிர் பிரிந்தது. அவரது மரணத்துக்கு பல்வேறு தரபினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.