கேஜ்ரிவாலுக்கு எதிராக தொடரும் போர்க்கொடி! மேலும் 5 எம்.எல்.ஏக்கள் அதிருப்தி?
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக அவரது அரசுக்கு ஆதரவு அளித்து வரும் ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ ஆகியோரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே ஆம் ஆத்மியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. வினோத் குமார் பின்னியுடன் இவர்கள் இணைந்துள்ளனர்.
28 எம்.எல்.ஏக்களைக் கொண்ட ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஒரு சுயேட்சை உறுப்பினர் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைத்திருக்கிறது.
இந்நிலையில் கேஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய எம்.எல்.ஏ. வினோத் குமார் பின்னி ஆம் ஆத்மி கட்சியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டார்.
இதனிடையே டெல்லியில் நேற்று செய்தியாளர்களை வினோத் குமார் பின்னி சந்தித்தார். அப்போது அவருடன் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ. ஷோயிப் இக்பால், சுயேச்சை எம்.எல்.ஏ ராம்பிர் சோகீன் ஆகியோரும் இருந்தனர்.
இந்த சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய பின்னி, டெல்லியில் யதேச்சதிகார போக்குடன் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆட்சி நடத்தி வருகிறார். தேர்தலின் போது வெளியிட்ட அறிவிப்புகளையும் சலுகைத் திட்டங்களையும் முழு ஈடுபாட்டுடன் அவர் நிறைவேற்றவில்லை.
முதல்வர் கேஜ்ரிவாலுக்கு எதிராக மேலும் ஐந்து எம்.எல்.ஏக்கள் அக்கட்சியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர். நாங்கள் அனைவரும் ஒன்று கூடி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க இருக்கிறோம்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கேஜ்ரிவால் அரசுக்கு 48 மணிநேர கெடு விதிக்கிறோம் என்றார்.