மதுரா கலவரம் பற்றி வாய் திறந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார்! உ.பி. அரசின் மெத்தனம் பற்றி வியப்பு
லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா நகர் அருகே உள்ள ஜவஹர் பாக் பகுதியில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான 260 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்தவர்களை, நீதிமன்ற உத்தரவின்பேரில் அகற்றும் நடவடிக்கையின்போது வன்முறை வெடித்தது. இதில் 2 போலீஸ் அதிகாரிகள் உட்பட 29 பேர் கொல்லப்பட்டனர்.
மதுராவில் தற்போது, படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. நீதி விசாரணையும் தொடங்கி உள்ளது.
இந்த வன்முறை குறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுவரையில் மவுனம் காத்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார், இன்று இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை கவலை அளிக்கிறது. நீண்டகாலமாக அந்த இடம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்ததும், அவர்களிடம் ஏராளமான ஆயுதங்கள் இருந்ததும் வியப்பாக உள்ளது.
இத்தனை வருடங்களாக உத்தர பிரதேச அரசு ஏன் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? இந்த நடவடிக்கையை முதலிலேயே எடுத்திருந்தால் கலவரமே வந்திருக்காது.
பீகாரில் அமல்படுத்தப்பட்டுள்ள மதுவிலக்கிற்கு, நாடு முழுவதும் பாராட்டு கிடைத்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களை மதுவிலக்கை அமல்படுத்த பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும். இவ்வாறு நிதிஷ்குமார் தெரிவித்தார்.