இந்தியா வந்துள்ள கனடா பிரதமரை 'அவமானப்படுத்துகிறதா' மத்திய அரசு? பின்னணி என்ன?
Recommended Video
டெல்லி: கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன், இந்தியாவில் 8 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியா வந்தது முதலே மத்திய அரசால் புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறார்.
மோடி அரசின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் ஊடக விவாதங்களுக்கு காரணமாக மாறியுள்ளது. இதுபற்றி வெளியுறவு விவகாரங்களை கவனிக்கும் ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், "இதுவரை எனது அனுபவத்தில் இப்படி ஒரு வெளிநாட்டு பிரதமரின் சுற்றுப் பயணத்தை பார்த்தது கிடையாது" என்கிறார்.
இதற்கு காரணம், ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவில் 8 நாட்கள் சுற்றுப் பயணத்திற்கான திட்டத்தோடு வந்துள்ளபோதிலும், வெறும் அரை நாள் மட்டுமே, தலைநகர் டெல்லியில் இருக்க உள்ளார்.
டெல்லியில் அரை நாள்
வரும் 23ம் தேதி டெல்லியில் ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். கனடா பிரதமருடன் வந்துள்ள 6 அமைச்சர்களுக்கும் கூட இந்தியாவில் பெரிதாக எந்த அலுவல்களும் ஒதுக்கப்படவில்லை. அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலேன்ட், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் பேச்சு நடத்த உள்ளது மட்டுமே அமைச்சர்கள் இடையிலான பெரிய சந்திப்பாகும்.
மோடி போகவில்லை
பிப்ரவரி 17ம் தேதி ஜஸ்டின் ட்ரூடோ, டெல்லி விமான நிலையத்திற்கு குடும்பத்தோடு வந்திருந்தபோது, அவரை வரவேற்க பிரதமர் மோடி செல்லவில்லை. கேபினட் அந்தஸ்திலுள்ள ஒரு அமைச்சர் கூட வரவேற்க அனுப்பப்படவில்லை. இணை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தான் கனடா பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றார்.
கட்டிப்பிடி வரவேற்பு
அமெரிக்க அதிபராக பதவி வகித்த பராக் ஒபாமா, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அபு தாபி முடி இளவரசர் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் ஆகியோரை கட்டித் தழுவி வரவேற்ற மோடி, கனடா பிரதமரை கண்டுகொள்ளவேயில்லை என்று ஒப்பீடு செய்து செய்தி வெளியிட்டு வருகின்றன சர்வதேச ஊடகங்கள்.
டுவிட்டரில் கூட வரவேற்கவில்லை
கனடா பிரதமர் இந்தியாவில் ஒரு வாரம் சுற்றுப் பயணம் செய்யும் நிலையில் கூட, பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருந்து இதுவரை வரவேற்பு தெரிவித்து ஒரு டிவிட்டும் வெளியிடப்படவில்லை. பிற தலைவர்கள் வருகையின்போது மோடியின் டுவிட்டர் பக்கத்தில் வரவேற்புகள் இடம் பெற்றது வழக்கம்.
குஜராத்தில் கூட சந்திக்கவில்லை
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்து இத்தனை நாட்கள் ஆகியும் நரேந்திர மோடி அவரை இன்னும் நேரில் சந்திக்கக் கூட இல்லை. திங்களன்று பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு ட்ரூடோ சென்றபோது, அங்கும் பிரதமர் மோடி செல்லவில்லை. இதுபோன்ற செயல்பாடுகள் கனடா பிரதமருக்கு மதிப்பை குலைக்கும் வகையில் வேண்டுமென்றே செய்யப்படுவதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சீக்கிய தீவிரவாதிகளுக்கு ஆதரவு
இந்தியாவின் வழக்கமான விருந்தோம்பல் பண்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, பிரதமர் மோடி செயல்பட காரணம் ஒன்றே ஒன்றுதான். அதுதான், சீக்கிய தீவிரவாத அமைப்புகளுக்கு கனடா வழங்கும் ஆதரவு. சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு கேட்டு போராடும் இனக்குழுக்களுக்கு கனடா பிரதமர் ஆதரவு அளிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. கனடாவில் சீக்கியர்கள் கணிசமாக வாழ்கிறார்கள், கடந்த ஆண்டு ஏப்ரலில் கனடா தலைநகர் டொரான்டோவில் நடைபெற்ற 'கல்சா டே' பேரணியில் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். தீவிர சீக்கிய இனவாத குழு ஏற்பாடு செய்த அந்த பேரணியில் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றதற்கு, வெளியுறவு துறை மூலம் ஏற்கனவே அதிருப்தியை பதிவு செய்தது இந்தியா.
புறக்கணிப்பின் பின்னணி
கடந்த மாதம், 16 கனடா குருத்வாராக்கள் இந்திய அதிகாரிகள், ஆர்எஸ்எஸ், சிவசேனா உறுப்பினர்களை கனடாவுக்குள் நுழைய விடமாட்டோம் என அறிவித்தன. இதற்கு கனடா அரசு எந்த எதிர்வினையும் காண்பிக்கவில்லை. இந்த நிலையில்தான், இந்தியா வந்துள்ள ஜஸ்டின் ட்ரூடோவை புறக்கணிப்புக்குள்ளாக்கியுள்ளது மத்திய அரசு.