ஓவரா உப்பு சேர்த்துகிட்டா மானம், ரோசத்தோட இதய நோயும் வருதாம்... ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
லண்டன்: உணவில் அதிக அளவு உப்புச் சேர்த்துக் கொள்வதால் இதய நோய் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகி சுமார் 17 லட்சம் மக்கள் பலியாவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என சொல்லி வைத்தவர்கள் தான், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்றார்கள். இது உப்பிற்கும் பொருந்தும். நாள்தோறும் உடலின் தேவைக்கு அதிகமான உப்பைச் சேர்த்துக் கொள்வதால் இதய நோய் உண்டாவதாக ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உணவில் அதிக உப்பை சேர்த்துக் கொள்ளும் 187 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இத்தகவல் வெளியாகியுள்ளது.
2கி உப்பு போதும்...
உலக சுகாதார அமைப்பு ஒரு நாளைக்கு 2 கிராம் உப்பை உணவில் சேர்த்து கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது என பரிந்துரைத்துள்ளது.
2 மடங்கு அதிகம்...
ஆனால், தேவையை விட இரண்டு மடங்கு அதிகமாக உப்பை மனிதர்கள் உணவில் சேர்த்துக் கொள்வதாக இந்த ஆய்வு கூறுகிறது.
3.95கி...
அதாவது, சராசரியாக நாளொன்றுக்கு மனிதர்கள் 3.95கிராம் உப்பை உணவில் சேர்த்துக் கொள்பவர்கள் அதிக இதயப் பிரச்சினைகளுக்கு ஆளாவதாக தெரிய வந்துள்ளது.
வேலைப்பளு...
அதிக சோடியம் உடலில் சேர்வதால் இதயத்தின் மீதான வேலைப்பளு அதிகரிக்கிறது. இதனால் விரைவாக இதய நோய்த் தாக்கம் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மரண விகிதாச்சாரம்...
அதிக உப்பினால் இதய நோய் பாதிப்பு ஏற்பட்டு சுமார் 17 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 61.9 சதவீதம் ஆண்கள், 38.1 சதவீதம் பெண்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியர்கள்...
இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவில், இந்தியாவின் நகரங்களில் வாழ்பவர்கள் நாளொன்றிற்கு 7.6கி உப்பை எடுத்துக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் ரத்த அழுத்தம்...
அளவுக்கதிகமான உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதால் நான்கில் ஒரு இந்தியர் உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுவதாகவும், ஒருவர் இதய நோயால் பாதிக்கப் படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
பின்விளைவுகள்...
இவ்வாறு அதிகளவு உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதென்பது புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகளுக்குச் சமமான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக இந்த ஆய்வு எச்சரிக்கை விடுக்கிறது.
அதிகசோடியம்...
உலகளவில் ஏற்படும் ஐந்து மரணங்களில் நான்கு உடலில் அதிகளாவு சோடியம் சேர்வதாலேயே ஏற்படுவதாகவும், அதிலும் குறிப்பாக வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளிலேயே இம்மரணங்கள் அதிகளவு நடப்பதாகவும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.